தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆறு மேலகிரி வழியாக பாயும் இடத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கும் மலைப்பாறைகள் மத்தியில் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி அமைந்துள்ளது.
வரிசையாக அருவிகள் விழும் இந்த பிரமாண்ட நீர்வீழ்ச்சி இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அருவியில் விழும் நீர் மூலிகைக்குணாம்சங்கள் கலந்த மருத்துவ சக்தி கொண்டதாக ஒரு நம்பிக்கை.
இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியில் காணப்படும் கார்பானைட் பாறைகள் தெற்காசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன.
கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும் போது இந்த பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல் சவாரி செய்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக பயணிகளால் ரசிக்கப்படுகிறது. நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு அருகிலேயே அப்போதே நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக பயணிகளுக்கு பொரித்து தரப்படுவது மற்றொரு சுவாரசியம்.
அச்சுறுத்தும் மலைப்பாறை அமைப்புகளும் நீரின் மூர்க்கத்தனமான பிரவாகமும் ஒகேனக்கல் பகுதியில் காணப்படுவதை போன்று வேறெங்கும் இல்லை எனும் அளவுக்கு வித்தியாசமான இயற்கை அமைப்புடன் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி காட்சியளிக்கிறது.
இயற்கையின் பிரம்மாண்டத்துக்கு முன் நாம் எங்கே எனும் பிரமிப்பு இந்த மலை நீர்வீழ்ச்சியை தரிசிக்கும்போது நம்முள் நிறைவதை நாம் உணரலாம். மனக்கசடுகள் யாவும் மறைந்து சாந்தத்தை அளிக்கும் சக்தி படைத்த இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டில் அனைவரும் ஒரு முறை விஜயம் செய்தே ஆக வேண்டிய இயற்கைஎழில் ஸ்தலமாகும்.