காவிரி ஆற்றின் பாதையில் உள்ள ஒரு அழகிய சிறு கிராமம் இந்த ஒகேனக்கல் அல்லது ஹொகனேக்கல் ஆகும். கன்னட மொழியில் ஹொகே என்பது புகையையும், கல் என்பது பாறையையும் குறிக்கும். மலைப்பாறைகள் வழி விழுந்து சிதறும் அருவி நீர் புகை மண்டலமாக இப்பகுதி முழுவதும் வியாபித்திருப்பதால் ‘ஹொகேனக்கல்’ என்று அழைக்கப்பட்டு அதுவே ஒகேனக்கல் என்று திரிந்து நிலைத்துவிட்டது.
கர்நாடகம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த பிரசித்தமான நீர்வீழ்ச்சி ஸ்தலம் பெங்களூரிலிருந்து 150 கி.மீ தூரத்திலும் சென்னையிலிருந்து 343 கி.மீ தூரத்திலும், சேலத்திலிருந்து 90கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுப்பயணிகள் சேலம், தர்மபுரி மார்க்கமாக ஹொகனேக்கல் சென்றடையலாம்.
அச்சுறுத்தும் இயற்கையின் மூர்க்கம்
எங்கு பார்த்தாலும் மிரளவைக்கும் மலைப்பாறைகள், அவற்றின்மீது ஆக்ரோஷமாக விழுந்து சிதறும் நீரின் அசுரத்தனம், பெருகி ஓடும் பிரவாகத்தின் ஓட்டத்தில் தெறிக்கும் நீரின் சக்தி இவை யாவுமே ஒகேனக்கல்லுக்கு விஜயம் செய்யும் பயணிகளை திகைக்க வைத்து விடுகின்றன.
அருவிப்பகுதிக்கு அருகில் இடி இடிப்பது போன்று நீர்வீழ்ச்சி உருவாக்கும் ஒலியை வார்த்தைகளில் விவரிப்பது மிகக்கடினம். ஒகேனக்கல் பகுதியில் எங்கு திரும்பினாலும் நம் விழிகளை அகற்ற முடியாத அளவுக்கு இயற்கையின் பிரம்மாண்டமானது விதவிதமான பரிமாணங்களில் நம் கண் முன் விரிகிறது.
பொழுதுபோக்கு அம்சங்கள்
அப்போதே பிடிக்கப்பட்டு எண்ணையில் பொரித்துக்கொடுக்கப்படும் சுவையான மீன்கள், உற்சாகத்தை தரும் எண்ணெய்க்குளியல் போன்ற சுவாரசியமான அம்சங்கள் ஒகேனக்கல் அருவிப்பகுதியில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
விசேஷ மூலிகைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் தலைமுறையாக தலைமுறையாக தொடர்ந்து வரும் பாரம்பரிய அனுபவம் போன்ற அம்சங்களை கொண்ட எண்ணெய் மசாஜ் குளியலை உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் ஒருவித சிகிச்சை என்றே சொல்லலாம்.
சாகச விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் அருவிப்பகுதியில் நீச்சலில் ஈடுபடலாம். ஆனால் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை. இது தவிர அருவி அமைந்திருக்கும் மேலகிரி மலையில் நீண்ட மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் போன்றவற்றிலும் சாகச விரும்பிகள் ஈடுபடலாம்.
பிரமிக்க வைக்கும் பசுமையான இயற்கைக்காட்சிகள் இப்பகுதியில் ஏராளம் நிரம்பியுள்ளன. அடிக்கடி பல சினிமாப்படப்பிடிப்புகளும் இந்த மலைப்பகுதியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஹொகனெக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்வது மற்றொரு திகில் கலந்த உற்சாக அனுபவமாகும். வட்டக்கூடை போன்ற இந்த பரிசல்களில் அமர்ந்தபடி சுற்றிலும் வானுயர்ந்து நிற்கும் மலைகள் மத்தியில் நீர்த்தேக்கத்தை சுற்றி வருவது மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று. பார்ப்பதற்கு அளவில் சிறியதாக தோன்றினாலும் இந்த பரிசல்களில் எட்டு பேர் வரை பயணிக்கலாம்.
எனினும் பயணிகள் பாதுகாப்பு அம்சங்களை தங்கள் பொறுப்பில் திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது. ஒகேனக்கல் பகுதியில் உள்ளூர் சிறுவர்கள் கரடு முரடான மலைமுகடுகளிலிருந்து நீர் சுழித்துக்கொண்டு ஓடும் ஆழமான ஆற்றில் குதித்து காண்பிப்பது சுற்றுலாப்பயணிகளை திகைக்க வைக்கும் மற்றொரு ஒரு அம்சமாகும்.
நல்ல சாலை இணைப்புகளை கொண்டிருக்கும் ஹொகனேக்கல் சுற்றுலாத்தலத்துக்கு வருடமுழுதுமே எப்போது வேண்டுமானாலும் விஜயம் செய்யலாம். இங்கு தங்குவதற்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் விடுதி உள்ளது.