ஜபல்பூரின் பேடகாட்டில் காணப்படும் பளிங்குக்கல் பாறைகள், மக்களின் வருகையைப் பொறுத்தவரை, ஜபல்பூரிலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் முதன்மையானதாகும். காலப்போக்கில் ஜபல்பூர் என்றாலே அது பளிங்குக்கல் பாறைகள் தான் என்றாகி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்பளிங்குக்கல் பாறைகள், நர்மதா நதியின் இருமருங்கிலும் சுமார் 100 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கின்றன. பேடகாட்டின் பளிங்குப் பாறைகளுக்கு வருவோர் பெரும்பாலும் அமைதியை நாடியே வருகின்றனர்.
சூரியனின் மின்னும் பொற்கதிர்கள் இந்த வெள்ளை மற்றும் பழுப்பு நிறப் பாறைகளின் மீது படும்போது இவை நதி நீரில் ஒரு நிழலுருவைப் படரச்செய்கின்றன. இக்காட்சி காணத் தெவிட்டாத எழில்மிகு காட்சியாகும்.
தண்ணென்ற நிலவொளி பாறைகள் மேல் விழும் அதே சமயத்தில் நதியிலும் பட்டு ஜொலிக்கும் போது பேடகாட் மற்றும் அதன் பளிங்குப் பாறைகள், பல மடங்கு அழகுடன் காணப்படுகின்றன.
அச்சமயத்தில் இங்கு படகு சவாரி செய்வது வாழ்வின் பொற்கணமாகும். வார்த்தைகளில் அடங்காத அரிய அனுபவத்தை அளிக்கவல்ல ஜபல்பூரின் பளிங்குப் பாறைகள் விவாதத்துக்கிடமின்றி கட்டாயம் சென்று வர வேண்டிய ஒரு சுற்றுலாத் தலமாகும்.
இப்பாறைகளின் ஊடாக நர்மதா நதியில் செல்லும் படகுச் சவாரி இங்கு வருவோர் கட்டாயம் சென்று மகிழ வேண்டிய ஒரு சுகானுபவமாகும். அதிலும், பௌர்ணமித் திங்கள் நாளில் செல்லும் படகுச் சவாரி மேலும் அற்புதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications