பச்மாரி தான் மத்தியப்பிரதேசத்தில் காணப்படும் ஓரே மலை வாசஸ்தலமாகும். பச்மாரி, சத்புராவின் ராணி என்ற அர்த்தத்தில் சத்புரா கி ராணி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. சத்புரா மலைத்தொடரில் காணப்படும் இது சுமார் 1110 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
பச்மாரி : பழங்குடி சரித்திரம்!
பச்மாரி, பழங்குடி ராஜ்யமான கோண்ட் பழங்குடியின் தலைநகரமாக இருந்துள்ளது. கோண்ட் பழங்குடியின் மன்னராக பவூத் சிங் என்பவர் இருந்துள்ளார். பச்மாரி, 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் ஃபோர்சித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின் இங்கு நிகழ்ந்த நவீன மாற்றங்கள் அனைத்திற்கும் இவரே காரணமாக இருந்துள்ளார். அவரது ஆர்வமே இதனை மிக உயர்வான அந்தஸ்துடைய ஒரு மலை வாசஸ்தலமாக மாற்றியமைக்கக் காரணமாக இருந்துள்ளது.
இது மத்திய இந்தியாவின் மிக உயரமான இடமாக இருப்பதினால், பிரிட்டிஷார் இதனை தங்கள் இராணுவ முகாமாக ஆக்கினர். பச்மாரி, 2009 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பச்மாரி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
பச்மாரி சுற்றுலாத்துறை இங்கு வருவோர் கண்டு களிக்கக்கூடிய பல்வேறு இடங்களைக் கொண்டுள்ளது. மத்திய இந்தியாவில் அமைந்துள்ள துப்கார், விந்திய-சத்புரா மலைத்தொடரில் உள்ள உயரமான ஒரு இடமாகும்.
இது சாஸர் வடிவில் அமைந்த சுவாரஸ்யமானதொரு மலை வாசஸ்தலமாகும். இங்கு உள்ள இராணுவ முகாமிற்காகவும் மிகவும் பிரபலமாக உள்ள பச்மாரி, பழங்காலக் குகைகள், புராதனக் கட்டிடங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை அழகு, வனப்பகுதி, செடியினங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
மலைப்பாறைகள், அடர்பசுமையான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடு, அலையலையாக விழும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் இதமான வானிலை ஆகியவை இதனை இயற்கை அன்னையின் உறைவிடமாகவே ஆக்கியுள்ளது.
சூரிய அஸ்தமனத்தை கண்டு களிப்பதற்கு பச்மாரி மிக உகந்த ஒரு ஸ்தலமாகும். ஹண்டி கோ, ஜடா ஷங்கர் குகை, பாண்டவா குகைகள், அப்ஸரா விஹார், தேனீ நீர்வீழ்ச்சி, டட்சஸ் நீர்வீழ்ச்சி ஆகியவை பச்மாரியின் சில பிரதான ஈர்ப்புகளாகும்.
பச்மாரி : எப்போது, எப்படி செல்லலாம்?
வருடம் முழுவதுமே அற்புதமான வானிலையைக் கொண்டிருக்கும் பச்மாரிக்கு, எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். எனினும், அக்டோபர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள், இங்கு செல்வதற்கான மிகச் சிறந்த காலகட்டமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
இங்கு நிலவும் இதமான வானிலை, பச்மாரியின் சுற்றுலாவை ஊக்கமுறச் செய்கிறது. இந்த மலை ஸ்தலத்துக்குச் செல்ல விரும்புவோர், போபால் வரை இரயில் அல்லது விமானம் மூலம் சென்று, பின் எஞ்சியிருக்கும் தொலைவை சாலை வழியாகக் கடக்கலாம்.