மெஹ்ரான்கர் கோட்டையானது 150 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த அற்புதமான கோட்டை ராவ் ஜோதா என்பவரால் 1459ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஜோத்பூர் நகரத்திலிருந்து சாலை வழியாக இந்த கோட்டையை அடையலாம்.
ஏழு நுழைவாயில்களைக் கொண்டுள்ள இந்தக் கோட்டையின் இரண்டாவது வாசலில் பயணிகள் பீரங்கிக்குண்டுகள் தாக்கிய அடையாளங்களைக் காணலாம். அம்பேர் எதிரிகளிடமிருந்து கோட்டையை பாதுகாக்கும்போது தன் உயிரை இழந்த கிரத் சிங் சோடா எனும் மாவீரரின் ‘சாத்ரி’ ஒன்றும் இந்த கோட்டையில் உள்ளது.
சாத்ரி என்பது ஒருவரின் பெருமை மற்றும் புகழை கௌரவப்படுத்தும் வகையில் எழுப்பப்படும் குமிழ்வடிவ சிறுமாட அமைப்பைக்கொண்ட நினைவுச்சின்னம் ஆகும். இது ராஜபுத்திர வம்சத்தின் ஒரு பாரம்பரிய வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோட்டையிலுள்ள ஜெய் போல் எனும் நுழைவாயில் மஹாராஜா மான் சிங் அவர்களால் ஜெய்பூர் மற்றும் பிகானேர் படைகளை வெற்றிகொண்டதன் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஃபதேஹ் போல் எனப்படும் மற்றொரு வாசல் முகலாயர்களை வெற்றி கொண்டதன் ஞாபகச்சின்னமாக மஹாராஜா அஜித் சிங் அவர்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோட்டையின் ஒருபகுதி மியூசியமாக மாற்றப்பட்டு இங்கு பலவிதமான ராஜபல்லக்குகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அது தவிர இந்த அருங்காட்சியகத்திலுள்ள 14 காட்சி அறைகளில் அரச போர்க்கருவிகள், தளவாடங்கள் மற்றும் உடைகள் போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மோதி மஹால், ப்பூல் மஹால், ஷீஷா மஹால் மற்றும் ஜான்கி மஹால் போன்ற வரலாற்று கால மாளிகைகளையும் இங்கு காணலாம். மோதி மஹால் அல்லது முத்து மாளிகை என்று என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை மெஹ்ரான்கர் கோட்டையிலேயே பெரிய மாளிகையாகும்.
இது ராஜா சூர் சிங் என்பவரால் தன் குடிமக்களை சந்திக்கும் மண்டபமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு பயணிகள் ‘சிருங்கார் சௌக்கி’ எனப்படும் ராஜ சிம்மாசனத்தைக் காணலாம்.
மன்னரின் ஐது ராணிகளும் சபை நிகழ்ச்சிகளை கேட்பதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட மறைவான பலகணிகளுக்கு செல்லும் ஐந்து மாட அமைப்புகள் இங்கு உள்ளன. ப்பூல் மஹால் என்பது மெஹ்ரான்கர் கோட்டையின் கம்பீரமான மாளிகை ஆகும்.
இந்த அரண்மனை மன்னர்களின் அந்தரங்க அறைக்கூடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பூக்களின் மாளிகை என்று அறியப்படும் இந்த அரண்மனையின் கூரைப்பகுதி தங்கத்தால் ஆன ஜரிகை வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.
மஹாராஜா அபய் சிங் இந்த அரண்மனையை 18ம் நூற்றாண்டில் கட்டியுள்ளார். முஹலாய தளபதியான சர்புலந்த் கான் என்பவரை போரின் வென்றபிறகு அஹமதாபாத் பகுதியிலிருந்து இந்த தங்கம் சூறையாடப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தவிர ராஜவம்ச உருவப்படங்கள் மற்றும் ராகமாலா ஓவியங்கள் மஹாராஜா இரண்டாம் ஜஸ்வந்த் சிங் அவர்களால் இந்த அரண்மனையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஷீஷா மஹால் எனும் மாளிகை அருமையான கண்ணாடி வேலைப்பாடு நுணுக்கங்களைக் கொண்டுள்ளது.
கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் பிரகாசமான வண்ணங்கள் ஆகியவை கொண்ட உருவாக்கப்பட்ட ஆன்மீகச் சிலைகளை இங்கு பார்க்கலாம். தக்கத் சிங் என்பவரால் கட்டப்பட்ட தக்கத் விலா எனும் மாளிகையையும் இது உள்ளடக்கியுள்ளது.
இவர் ஜோத்பூர் ராஜவம்சத்தின் இறுதி மன்னரும் மெஹ்ரான்கர் கோட்டையில் இறுதியாக வசித்தவரும் ஆவார். தக்கத் விலா பாரம்பரிய மற்றும் காலனிய கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது.
ஜான்கி மஹால் எனும் மாளிகை ராஜகுல மகளிர் சபைமுற்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை காண்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இந்த மாளிகையில் தற்சமயம் ராஜவம்சத்தின் தொட்டில்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. கண்ணாடிப்பூச்சுகள் மற்றும் பறவைகள், யானைகள், தேவதைகள் போன்ற உருவங்கள் ஆகியவற்றால் இந்த தொட்டில்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications