சத்திஸ்ஹர் மாநிலத்தின் தென்பகுதியில் அதன் தலைநகரமான ராய்பூருக்கும், ஜக்தல்பூருக்கும் இடையே இந்த காங்கேர் மாவட்டம் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் பஸ்தர் மாவட்டத்தின் அங்கமாக விளங்கி வந்த இது 1998ம் ஆண்டில் தனி மாவட்ட அந்தஸ்தை பெற்றது. சிறிய மலைப்பகுதிகளை கொண்டுள்ள இம்மாநிலத்தில் மஹாநதி, தூத் , ஹத்குல், சிந்தூர் மற்றும் துரூர் ஆறுகள் பாய்கின்றன.
இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி வறண்ட இலையுதிர்காடுகளை கொண்டதாக காணப்படுகிறது. இவற்றில் சால், தேக்கு மற்றும் பல்வேறு இதர மரங்கள் வளர்ந்துள்ளன.
இம்மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அதிகமாக சால் மரக்காடுகளை பார்க்கலாம். தேக்கு மரக்காடுகள் பானுப்பிரதாப்பூர் பிரதேசத்தில் காணப்படுகின்றன. இவை தவிர, பல்வேறு மரங்கள் வளர்ந்திருக்கும் காட்டுப்பகுதிகள் மாவட்டம் எங்குமே விரவியுள்ளன. இந்த கலப்பு மரக்காடுகளில் மூலிகைச்செடிகள் மற்றும் சிலவகை பணப்பயிர்கள் போன்றவை வளர்கின்றன.
காங்கேர் மற்றும் அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள்
இந்தியாவின் முக்கியமான சுற்றுலா மாநிலமாக தற்போது பிரபலமடைந்துவரும் சத்திஸ்ஹர் மாநிலத்தில் இந்த காங்கேர் மாவட்டமும் ஒரு முக்கியமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்றுள்ளது.
காங்கேர் அரண்மனை எனும் புராதனமான அரண்மனை இங்கு விசேஷமான சுற்றுலா அம்சமாக வீற்றிருக்கிறது. இது 12ம் நூற்றாண்டில் மஹாராஜாதிராஜ் உதய் பிரதாப் தேவ் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக கடியா மலை, மலாஞ்ச்குடும் நீர்வீழ்ச்சி, மா ஷிவானி கோயில் மற்றும் சர்ரே-மர்ரே நீர்வீழ்ச்சி போன்றவற்றை குறிப்பிடலாம்.
கலை மற்றும் கலாச்சாரம்!
காங்கேர் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் பல்வேறு வடிவங்களில் கைவினப்பொருட்களை உருவாக்கும் திறன் வாய்க்கப்பெற்றவர்களாக உள்ளனர்.
மரத்தில் செதுக்கப்பட்டவை, வெண்கலப்பொருட்கள், சுடுமண் படைப்புகள், மூங்கில் பொருட்கள் போன்ற பல்வேறு கலைப்பொருட்கள் இவர்களது கைவண்ணத்தில் உருவாகின்றன.
உறுதியான மரவகைகள் இப்பகுதியில் ஏராளமாக வளர்வதால் இதுபோன்ற மரங்களில் செதுக்கி உருவாக்கப்படும் கலைப்பொருட்கள் இங்கு ஏராளமாக தயாராகின்றன. இவை உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் மக்களை வெகுவாக ஈர்க்கின்றன.
மூங்கிலில் உருவாக்கப்படும் பல்வேறு கலைப்பொருட்கள் மற்றும் வீட்டுபயோகப்பொருட்கள் போன்றவற்றுக்காகவும் இம்மாவட்ட மக்கள் பிரசித்தி பெற்றுள்ளனர். தேக்கு மற்றும் வெண் தேக்கு போன்ற அபூர்வ மரவகைகளில் தயாரிக்கப்படும் மரப்பொருட்கள் இப்பகுதியின் முக்கிய கைவினைப்படைப்புகளாக விளங்குகின்றன.
பழங்குடி இனத்தினருக்கே உரிய இந்த பிரத்யேக கலைத்திறமையை இந்த மாவட்டத்தில் கிடைக்கும் மூங்கில் மற்றும் மரப்பொருட்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். மாதிரி உருவங்கள், சிலைகள், சுவர்ப்பதிப்புகள் மற்றும் இருக்கைகள் என்று பல்வேறு வடிவங்கள் இங்கு மரம் மற்றும் மூங்கிலை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த கைவினைப்பொருட்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. சுவர் அலங்கார தொங்கிகள், மேசை விளக்கு மற்றும் மேஜை விரிப்பு போன்றவை இங்கு மூங்கிலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சில வீட்டு உபயோக பொருட்களாகும்.
சுற்றுலாவுக்கு ஏற்ற பருவம்
காங்கேர் மாவட்டத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரை சுற்றுலாவுக்கு ஏற்ற இதமான இனிமையான சூழல் நிலவுகிறது.
எப்படி செல்லலாம்?
167 கி.மீ தூரத்தில் உள்ள ராய்பூர் நகரத்தின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவை காங்கேர் மாவட்டத்துக்கான போக்குவரத்து இணைப்பை அளிக்கின்றன. இது தவிர NH43 தேசிய நெடுஞ்சாலை காங்கேர் மாவட்டத்தை பல்வேறு நகரங்களுடன் இணைக்கிறது.