ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் கின்னார் உண்மையில் 'தேவதைகளின் வசிப்பிடம்' என்றழைக்கப்படுகிறது. பனி படர்ந்த மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், செழுமையான பண்ணைகள் மற்றும் அழகிய திராட்சைத் தோட்டங்கள் இந்த இடத்தின் ரம்மியமான தோற்றத்தினை விளக்கும் வகையில் இருக்கும். இவை மட்டுமல்லாமல் வித்தியாசமான பல தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் இங்கே உங்களால் காண முடியும். இந்த மாநிலத்தின் பிற இடங்களில் காணப்படும் கலாச்சாரங்களிலிருந்து மிகவும் மாறுபட்ட திபெத்திய கலாச்சாரத்தை இங்குள்ள மக்கள் பின்பற்றுவதையும் நீங்கள் காண முடியும்.
சங்லா பள்ளத்தாக்கு மற்றும் ஹங்க்ராங் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டும் கின்னாரில் அமைந்துள்ள முக்கியமான பள்ளத்தாக்குகளாகும். சங்லா பள்ளத்தாக்கு அதன் பழத் தோட்டங்களுக்காகவும், ஹங்க்ராங் பள்ளத்தாக்கு அதன் மேய்ச்சல் நிலங்களுக்காகவும் மிகவும் அறியப்படும் இடங்களாகும்.
சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தின் மிகவும் புகழ் பெற்ற பார்வையிடமாக கருதப்படும் கின்னார் கைலாஷ் மலையையும் காணலாம். இது மட்டுமல்லாமல் இயற்கையழகிற்காக அறியப்படும் கல்பா கிராமத்திற்கும் சென்று வரலாம்.
கின்னாருக்கு மிக அருகில் இருக்கும் விமான தளம், கல்பா நகரத்திலிருந்து 249 கிமீ தொலைவில் உள்ள சிம்லாவில் உள்ளது. சிம்லா விமான நிலையம் டெல்லி, சண்டிகர், மற்றும் இதர பல முக்கிய இந்திய நகரங்களுக்கும நேரடி தொடர்பை பெற்றுள்ள இடமாகும்.
கின்னாருக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் 230 கிமீ தொலைவில் உள்ள சிம்லா இரயில் நிலையம் ஆகும். ராம்பூர் மற்றும் சிம்லா ஆகிய இடங்களிலிருந்து கின்னாருக்கு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கின்னாரின் பருவநிலை வருடம் முழுவதும் மிதமானதாக இருக்கும். கோடைகாலம் ஜீன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும். அக்டோபர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் மே மாதம் வரை நீண்டு கடுங்குளிரை உருவாக்க கூடியதாக இருக்கும்.
இந்த நாட்களில் மெர்குரியின் அளவு பூஜ்யத்திற்கும் குறைவாக சென்று விடும். எந்த பருவநிலையானாலும் கின்னாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடிமனான கம்பளி உடைகளை எடுத்து வருவது நல்லதாகும்.