பட்டீசுவரம் துர்கையம்மன் ஆலயமானது கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டீசுவரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவிலில் வீற்றிருப்பவர், இந்து தெய்வமான துர்கையம்மன் ஆவார்.
துர்கையம்மன் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துர்க்கையம்மனைத்தரிசித்து அருள்பெற்றுச் செல்ல இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.
நுண்கலைகளின் காவலனும் சிவபெருமானின் தீவிரபக்தனுமான ராவணனனைக் கொன்றதனால், அப்பாவம் நீங்க சிவனைநோக்கி தவம் இருந்த ராமபிரானால் வழிபடப்பட்ட சிவலிங்கம் ஒன்று இங்கு உள்ளது.
இக்கோவில் அளவில் மிகப்பெரியதாகும். கோவில் நிர்வாகத்தினரால் மிகவும் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. இக்கோவிலில் மிகப்பிரம்மாண்டமான கோபுரங்கள் ஐந்து உள்ளன. கடந்த நூற்றாண்டில், இக்கோவிலில் பல புனர்நிர்மானப் பணிகள் நடைபெற்றன.
சிற்சில கட்டிடங்களில் புதிதாகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. இக்கட்டுமானப் பணிகள் சோழ, பல்லவ மற்றும் நாயக்கர் கட்டிடக் கலையை நினைவு படுத்துவதோடல்லாமல், இவ்வரசவம்சத்தினர்கள் இக்கோவிலின் நிர்மாணப்பணிகளில் ஆற்றிய பங்கினையும் நினைவுபடுத்துகின்றன.