காரைக்குடி, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முனிசிபல் நகரமாகும். இவ்வூர், மொத்தம் 75 கிராமங்களை உள்ளடக்கிய செட்டிநாடு பகுதியின் ஒரு அங்கமாகும். திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்தென்னிந்திய நகரம், அதன் தனிச்சிறப்பு மிக்க வீடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இங்குள்ள வீடுகள், சுண்ணாம்புக் கல்லினால் கட்டப்பட்டு, “காரை வீடுகள்” என்று உள்ளூர் வழக்கில் அழைக்கப்படுகின்றன. இங்கு “காரை” என்றழைக்கப்படும் சுண்ணாம்புக் கல் சூளைகள், மிக அதிக அளவில் இருப்பதினால், இதன் பெயர் “காரைக்குடி” என்று அழைக்கப்படுவதாக சிலர் நம்புகின்றனர்.
காரைக்குடி, முன்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்று, முனிசிபாலிட்டி அந்தஸ்தை, 1928-ம் வருடம் பெற்றுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, காரைக்குடியின் சரித்திரம் பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை.
இங்குள்ள மிகப் புராதனமான கோயில் 1800 ஏ.டி –யைச் சேர்ந்தது, அதனால் இந்நகரும், 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
காரைக்குடியும், செட்டியார்களும்!
செட்டியார் குடும்பங்கள் காரைக்குடியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தனர் என்பது ஊரறிந்த உண்மை. இன்றும் கூட, இந்நகரில் செட்டியார் சாதியினர் அதிகம் வாழ்வதைப் பார்க்கலாம்.
காரைக்குடி நிர்மாணிக்கப்பட்ட நாளிலிருந்து, இவர்கள் வணிகம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செட்டியார்கள், இந்நகரில், கல்வி நிறுவனங்கள் கட்டுவது, வங்கிகளுக்கு நிதியுதவி செய்வது, கோயில்களை நிறுவுவது, அனைத்து விசேஷங்களையும் பாரம்பரிய முறையில் கொண்டாடுவது, ஆகியவற்றின் மூலம், இந்நகரை முக்கியத்துவம் வாய்ந்ததாக வடிவமைக்க, பெரிதும் பாடுபட்டுள்ளனர். இது மட்டுமின்றி, பல்வேறு சமூக சீர்திருத்தங்களை, நடைமுறைப்படுத்தும் பொறுப்பையும் ஏற்று செவ்வனே செய்து வந்துள்ளனர்.
காரைக்குடியை, அனைத்து வகையிலும், தன்னிறைவு பெற்றதாக மாற்ற விரும்பிய, செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்த வள்ளல் அழகப்பர், அழகப்பா பல்கலைக்கழகத்தை, இந்நகரில், நிறுவினார்.
இப்பல்கலைக்கழகம், தேசிய அளவில் நல்ல மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. காரைக்குடியிலிருந்தும், அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும், ஏராளமானோர் இங்கு பொறியியல் கற்க வருகின்றனர்.
இப்பல்கலைக்கழகத்திலுள்ள பொறியியல் கல்லூரி, நாட்டிலுள்ள தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
மற்ற பாடப் பிரிவுகளான பி.டெக் முதலியன, இப்பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன. பொறியியல் பாடப் பிரிவுகள் தவிர, கலை, நுண்கலை, அறிவியல் மற்றும் மனித வர்க்கங்கள் போன்ற பாடப் பிரிவுகளும் இங்கு உள்ளன.
தமிழ்நாட்டில் காரைக்குடியின் முக்கியத்துவம்
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்டிருப்பதோடல்லாமல், காரைக்குடி, திரைப்படத்துறையினரின் விருப்பமான படப்பிடிப்புத் தலமாகவும் உள்ளது. திரு ஏ.வி. மெய்யப்ப செட்டியார் அவர்களால் ஏ.வி.எம் ஸ்டுடியோ, இங்கு ஆரம்பிக்கப்பட்டபின், ஏராளமான தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. மிகச் சிறந்த தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் சில, இங்குள்ள படப்பிடிப்புத் தளங்களில் படமாக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள், இங்கு திரைப்படங்கள் எடுக்கப்படுவதால் கவரப்படுவது மட்டுமல்லாது, காரைக்குடியின் பிரத்யேக சமையல் பாணியில், நாவூறும் வகையில் தயாராகும், உணவு பதார்த்தங்களாலும், பெரிதும் கவரப்படுகின்றனர்.
“செட்டிநாடு” என்று பிரபலமாக அழைக்கப்படும் உள்ளூர் சமையல் பாணியின் பெயர், இந்நகரின் நிர்மாணிப்பிலும், வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்த செட்டியார் ராஜாக்களின் பெயரில் இருந்து வந்ததாகும். உள்ளூர்வாசிகள் “செட்டிநாடு” உணவு வகைகளை “ஆச்சி சமையல்” என்றே குறிப்பிடுகின்றனர்.
இவ்வுணவு பதார்த்தங்கள், பலவகை நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு, தனித்தன்மையோடு சமைக்கப்படுகின்றன.
இங்கு வருகை தருவோர், சீயம், கந்தரப்பம், இளந்தோசை, மசாலாப் பணியாரம், வெள்ளியம் பணியாரம் மற்றும் தாளிச்ச இடியாப்பம் போன்ற உள்ளூர் உணவு வகைகளை ஒரு கை பார்க்காமல் திரும்புவது வீண்.
நொறுக்குத் தீனி வகைகளான முறுக்கு வடை, சீப்புச் சீடை, தட்டை, பொரிவிளங்கா உருண்டை, கருப்பட்டி பணியாரம், குழல், சீடைக்காய், அதிரசம் மற்றும் மா உருண்டை ஆகியவற்றையும் கட்டாயம் முயற்சிக்கலாம்.
சுவையான, உடல்நலத்துக்கு ஊறு விளைவிக்காத வகையில், உள்ளூரில் தயாரான நொறுக்குத் தீனி வகைகள், கடைகள் மற்றும் உணவகங்கள் பலவற்றில் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி, உங்கள் ஊர்களுக்கும் எடுத்துச் செல்லலாம்.
காரைக்குடியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள், கண்ணுடையநாயகி கோயில், கொப்புடை அம்மன் கோயில், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில், மற்றும் செட்டிநாடு அரண்மனை முதலியனவாகும்.
காரைக்குடி, வெப்பமான கோடைகள், மிதமான மழைப்பொழிவு மற்றும் குளிர்ச்சியான குளிர்காலம் ஆகிய வானிலை மாற்றங்களைக் கொண்டு விளங்குகிறது. இந்நகருக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையம், திருச்சியில் உள்ள விமான நிலையம் ஆகும்.
இங்கு அமைந்துள்ள இரயில் நிலையம், தென்னிந்தியாவின் முக்கியமான பல நகரங்களுடன், இரயில்களின் மூலம், நன்கு இணைக்கப்பட்டுள்ளது. காரைக்குடியை, சாலை வழியாகவும் எளிதாக அடையலாம்.