மதனப்பள்ளி நகருக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கும் ஹார்ஸ்லி குன்று மிகவும் பிரசித்தி பெற்ற கோடை கால மலைவாசஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு மதனப்பள்ளி நகரம் பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக அடையும் தொலைவில் இருப்பதால் அந்த பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஹார்ஸ்லி குன்றில் தங்கள் கோடை காலங்களை கழிக்க கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
ஹார்ஸ்லி குன்று முன்பு எனுகு மல்லம்மா கொண்ட என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு முன்னொரு காலத்தில் மல்லம்மா என்றொரு பெண் யானைகளால் வளர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
அந்த சிறிய பெண்ணின் நினைவாகவே இந்தக் குன்று அந்நாளில் எனுகு மல்லம்மா கொண்ட என்ற பெயரால் அறியப்பட்டது. இந்தப் பெண் அந்நாட்களில் நோய்வாய்ப்பட்ட பழங்குடி மக்களை பராமரித்து வந்ததாகவும், இதன் காரணமாக மல்லம்மா ஒரு நாள் திடீரென மாயமானதும் இதே குன்றில் அம்மக்கள் அவளுக்கு கோயில் கட்ட எண்ணியதாகவும் பற்பல நம்பிக்கைகள் இங்கு நிலவி வருகின்றன.
இதன் பிறகு W.D.ஹார்ஸ்லி என்ற ஆங்கிலேய அதிகாரி இந்தக் குன்றில் கராச்சி அறை மற்றும் பால் மாளிகை ஆகிய கோடை கால ரிசார்ட்டுகளை உருவாக்கியதால் அவர் பெயராலேயே ஹார்ஸ்லி குன்று என்ற பெயரை இந்தக் குன்று பெற்றது.