Search
  • Follow NativePlanet
Share

ஹைதராபாத் – நிஜாம் வம்சத்தின் ராஜரீக தடங்கள் பதிந்த மண்

153

தென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான இந்த ‘ஹைதராபாத்’ நகரம் - ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்த நகரமானது வரலாற்று காலத்தில் கீர்த்தி பெற்றிருந்த குதுப் ஷாஹி வம்சத்தை சேர்ந்த மன்னரான முஹம்மது குலி குதுப் ஷா என்பவரால் 1591ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நகரத்தின் பெயருக்கு பின்னால் முஹம்மது குலி குதுப் ஷாவுக்கும் பாகமதி எனும் பெண்ணுக்கும் இடையே இருந்த ஒரு காதல் கதை பின்னணியாக கூறப்படுகிறது.

அதாவது நடனப்பெண்மணியான இந்த பாகமதி மீது ஷாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இந்த நகருக்கு பாகநகர் என்று பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர் முஸ்லிம் மதத்திற்கு மாறி ஹைதர் மஹால் என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்ட இந்த பெண்ணை ஷா ரகசியமாக திருமணமும் செய்து கொண்டார். எனவே இந்த நகரம் ஹைதராபாத் என்றே பின்னர் வழங்கப்படலாயிற்று.

குதுப் ஷா வம்சத்தினரால் ஹைதராபாத் நகரம் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் ஆளப்பட்ட பின்னர் ஔரங்கசீப்பின் தென்னாட்டு படையெடுப்பின்போது இந்த ஹைதராபாத் நகரமும் முகலாயர் ஆளுகைக்கு கீழ் வந்தது.

1724ம் ஆண்டில் முதலாம் ஆசிப் ஜா என்பவர் ஹைதராபாத் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்து ஆசிப் ஜாஹி வம்சத்தை துவங்கி வைத்தார். பின்னர் ஹைதராபாத் நிஜாம் வம்சம் என்ற பெயரின் இந்த ஆசிப் ஜாஹி வம்சம் ஹைதராபாத்தை ஆண்டு வந்தது.

நிஜாம் வம்சத்தாரின் மஹோன்னத ஆட்சிக்காலத்திலிருந்து காலனிய ஆட்சி வரை இந்த ஹைதராபாத் நகரத்தின் செழுமையான வரலாறு அடங்கியிருக்கிறது. காலனிய ஆதிக்கத்தின் போது ஆங்கிலேயர்களுடன் ராஜ தந்திரமான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்ட நிஜாம் வம்சத்தினர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஹைதராபாத் நகரத்தை ஆண்டு வந்தனர்.

1769ம் ஆண்டிலிருந்து 1948 வரை இந்த ஹைதராபாத் நகரம் நிஜாம் வம்சத்தினரின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. ‘ஆப்பேரஷன் போலோ’ என்று பெயரில் அதிரடியாக எடுக்கப்பட்ட அரசியல் நிகழ்வுக்கு பின்னர் இது இறுதியாக இந்திய யூனியனுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகவும் ஹைதராபாத் நகரம் மாறிக்கொண்டது.

தனித்தன்மையான கலாச்சார அடையாளம் மற்றும் பாரம்பரியம்

புவியியல் ரீதியாக பார்த்தால் ஹைதராபாத் நகரம் அமைந்திருக்கும் இடமும் விசேஷமாக உள்ளது. மிகச்சரியாக இந்தியாவின் வடக்கு மண்டலம் முடிந்து தெற்கு மண்டலம் துவங்கும் இடத்தில் இந்த ஹைதராபாத் நகரம் வீற்றுள்ளது.

எனவே வடக்கு மற்றும் தெற்குப்பகுதியின் அனைத்து கலாச்சார அம்சங்களும் இயற்கையாகவே கிடைக்கப் பெற்று உன்னதமான கலையம்சங்கள் நிறைந்த ஒரு தனித்தன்மையான கலாச்சார அடையாளத்தை இந்த நகரம் தனக்கென உருவாக்கிக்கொண்டு விட்டது.

அக்காலத்திலிருந்தே இலக்கியம், இசை போன்ற கலாபூர்வமான அம்சங்களின் பீடமாக இந்த ஹைதராபாத் நகரம் விளங்கி வந்திருக்கிறது. கலையம்சங்களை பேணிவளர்ப்பதில் குறிப்பாக நிஜாம் மன்னர்களுக்கு இருந்த ஆர்வமும் இதற்கு ஒரு காரணமாகும்.

வாழ்வின் எல்லா உன்னதமான ரசனைகள் மீதும் ஆர்வம் கொண்டிருந்த நிஜாம் ராஜ வம்சம் கலைஞர்களை ஆதரிக்க ஒருபோதும் தயங்கியதில்லை என்பதை வரலாறு கூறுகிறது. பலவிதமான உணவுவகைகளை தயாரிப்பது போன்ற விஷயங்களிலும் இந்த ராஜ வம்சம் ஆர்வம் காட்டியுள்ளது.

புதுவிதமான உணவுப்பொருட்களை தயாரிக்கும் முயற்சிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமையல் கலைஞர்கள் நிஜாம் ஆட்சியில் வரவழைக்கப்பட்டனர். அதன் விளைவாக இன்றைய ஹைதராபாத் நகரத்தின் உணவுத்தயாரிப்பு முறை வித்தியாசமான அம்சங்களுடன் நாட்டின் பலபகுதிகளில் இருக்கும் நுணுக்கங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

‘ஹைதராபாதி தம் பிரியாணி’ எனப்படும் பிரியாணி தயாரிப்பு முறை உலகம் முழுவதுமே இன்று பிரசித்தி பெற்றுள்ளது. சொல்லப்போனால், ஹைதராபாத்திலுள்ள ஒவ்வொரு பாரம்பரிய குடும்பத்திலும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வரும் ஏதோ ஒரு உணவுத்தயாரிப்பு நுணுக்கம் பரம்பரை சொத்து போன்று இருக்கக்கூடும்.

இன்றும் குலையாத பழமையின் அழகு

இன்று ஹைதராபாத் நகரம் உலக வரைபடத்தில் அதன் தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்காகவும் விசேஷமாக அறியப்படுகிறது. இங்குள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணி புரிவதற்காக இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து இங்கு தங்கியுள்ளனர்.

இருந்தும், நவீன அடையாளங்களின் கேந்திரமாக மாறியிருந்தாலும் இன்றும் ஹைதராபாத் நகரம் தனது பழமையின் பொலிவை சிறிதும் இழக்காமல் இருப்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.

ஆங்காங்கே வானில் நீண்டிருக்கும் மினார்களும் (குமிழ் கோபுரங்கள்), வளையல் சந்தைகளும், காவ் காலி எனப்படும் அம்சங்களும், கடந்துபோன காலத்தின் சுவாசத்தை இன்றும் வெளியிடும் கோட்டைகளும் இந்த ஹைதராபாத் நகரத்தின் பழமையை தக்க வைத்துள்ளன.

நிஜாம் மன்னர்களின் கலாரசனை மற்றும் அவர்கள் ஆதரித்த நடனப்பெண்டிர் போன்ற உன்னதமான விஷயங்களை இன்னமும் நினைத்துப்பார்க்க தூண்டும் விதத்தில்தான் இன்றைய ஹைதராபாத் நகரம் காட்சியளிக்கிறது.

பழைய ஹைதராபாத் நகரத்தில் ஒரு உலா போய்வந்தாலே போதும் வரலாற்றுகால விஷயங்கள் பலவற்றை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கம்பீரமாக எழில் பொழிந்து நிற்கும் கோல்கொண்டா கோட்டையானது ‘முஹம்மது குலி குதுப் ஷா’ மன்னருக்கும் அவரது காதலி பாகமதிக்கும் இருந்த அழியாத காதலின் சாட்சியாக காட்சியளிக்கிறது.

காலங்காலமாக தொடர்ந்து வரும் கண்ணியம், பாரம்பரிய பெருமை மற்றும் நாகரிகம் போன்றவற்றை இன்றும் ஹைதராபாத் குடிமக்களிடம் காணமுடியும். முடியாட்சியாய் இருந்தாலும் கலாச்சாரம் நிரம்பிய ஒரு நாகரிக சமூகத்தை ஒரு அரசாங்கத்தால் உருவாக்கிவிட முடியும் என்பதற்கு இந்த ஹைதராபாத் நகரம் ஒரு உதாரணம் எனலாம்.

நவீன யுகத்தின் அடையாளங்கள்

பழமையின் அடையாளங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு மத்தியில் நவீன யுகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கான கேந்திரமாகவும் மாறியுள்ள நகரங்களில் இந்தியாவிலேயே இது ஒன்றுதான் என்று சொல்லும்படியான அந்தஸ்தை இந்த ஹைதராபாத் நகரம் பெற்றுள்ளது.

பொறியாளர்களின் தேவையை ஈடுசெய்யும்விதமாக கடந்த இருபது வருடங்களில் பல தொழில்நுட்ப கல்லூரிகள் இந்த மாநகரத்தில் பெருகியுள்ளன. இங்கிருக்கும் கல்லூரிகள் இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் வல்லுனர்களை பல துறைகளில் உருவாக்கிய பெருமையை கொண்டுள்ளன.

இதற்கான சான்றாக பல சர்வதேச நிறுவனங்களின் பிராந்திய அலுவலகங்கள் எதிர்கால வளர்ச்சியை மையப்படுத்தி இந்த நகரத்தில் அமைக்கப்பட்டிருப்பதை சொல்லலாம். தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான பல நிறுவனங்கள் இந்நகரத்தில் வேலை வாய்ப்பை பெருக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல திசைகளிலிருந்தும் இளைய தலைமுறையினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை பெறுவதற்காக இந்த நகரத்தை நோக்கி வருகின்றனர். எல்லா நவீன வசதிகளும் இந்த நகரத்தில் கிடைக்கின்றன.

மேலும் சட்டம், ஒழுங்கு நல்ல முறையில் காவல் துறையினரால் அமுல்படுத்தப்படுவதால் பாதுகாப்பான நகரமாகவும் இது விளங்குகிறது. பழமையின் பெருமைகளை விட்டுக்கொடுக்காமல் நவீன மாற்றங்களுக்கு இடம்கொடுக்கும் குடிமக்கள் இந்நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தூண்களாக உள்ளனர்.

ஆக மொத்தத்தில், வரலாற்று அம்சங்கள் மற்றும் புதிய இடங்களை தரிசிக்கும் ஆர்வம் உள்ள எல்லாவகை பயணிகளுக்கும் ஏற்றதொரு சுற்றுலாத்தலமாக இது காட்சியளிக்கிறது. சார்மினார், கோல்கொண்டா கோட்டை, சலார் ஜங் மியூசியம் மற்று ஹுசேன் சாகர் ஏரி போன்றவை இந்நகரில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

பருவநிலையை பொறுத்தவரையில் குளிர்காலத்தில் கூட அதிக வெப்பம் நிலவும் புவியியல் அமைப்பை ஹைதராபாத் நகரம் பெற்றுள்ளது. எனவே பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் பருவநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொண்டு புறப்படுவது நல்லது.

விமானம், ரயில் மற்றும் சாலை ஆகிய மூவழிகளிலும் நல்ல போக்குவரத்து வசதிகளை ஹைதராபாத் நகரம் பெற்றுள்ளதால் பயணம் மேற்கொள்வது மிக எளிதான ஒன்றாகவே இருக்கும்.

ஹைதராபாத் சிறப்பு

ஹைதராபாத் வானிலை

சிறந்த காலநிலை ஹைதராபாத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஹைதராபாத்

  • சாலை வழியாக
    APSRTC என்றழைக்கபடும் ஆந்திரப்பிரதேச ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஹைதராபாத் நகரை ஆந்திர மாநில நகரங்கள் மற்றும் அண்டை மாநில நகரங்களுடன் ஏராளமான பேருந்து சேவைகளால் இணைக்கிறது. பயணம் செய்ய வசதியாக உள்ள இந்த பேருந்துகள் சாதாரண கட்டணத்தையே வசூலிக்கின்றன. தனியார் சுற்றுலா நிறுவன வாகனங்களும் அதிக அளவில் ஹைதராபாத் நகருக்கு வருவதற்கும், திரும்புவதற்கும் வசதியாக இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தென்பிராந்திய ரயில்வே ஹைதராபாத் நகரத்தை எல்லா முக்கிய நகரங்களுடனும் நல்ல முறையில் ரயில் சேவைகளால் இணைத்துள்ளது. மேலும் தெற்கு ரயில்வேயின் தலைமையகம் செகந்தராபாத் பகுதியில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் நகரின் முக்கிய ரயில் சந்திப்பு அமைந்திருக்கும் செகந்தராபாத் ரயில் நிலையத்துக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து ரயில்கள் வருவதும் போவதுமாக உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஹைதராபாத் விமான நிலையம் உள்நாட்டு மற்று வெளிநாட்டு சேவைகளை அடிக்கடி கொண்டுள்ளது. இந்நகரத்தில் ராஜிவ் காந்தி டெர்மினல் என்ற வெளிநாட்டு விமான நிலையமும், என்.டி.ராமாராவ் டெர்மினல் எனும் உள்நாட்டு விமானநிலையமும் தனித்தனியாக உள்ளன. பயணத்துக்கான இருக்கைகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது மிக அவசியம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri