கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது.
கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது.
இருப்பினும் தனது காலத்தில் இந்த கோல்கொண்டா எந்த அளவுக்கு சிறப்புடன் விளங்கியிருக்கக்கூடும் என்பதை இப்போதும் கண்கூடாக காணலாம். கோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷாஹி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோட்டையின் பெரும்பான்மையான அமைப்புகளை நிர்மாணித்த பெருமைக்குரியவராக இப்ராஹீம் குலி குதுப் ஷா வாலி எனும் மன்னர் குறிப்பிடப்படுகின்றார். முக்கியமாக வடக்கிலிருந்து முகலாயர்களின் தாக்குதல்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்த கோட்டைப்பகுதி எழுப்பப்பட்டுள்ளது.
இந்தக்கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது. அதாவது கோட்டை வாயிற்பகுதியில் நின்று நாம் கைகளைத்தட்டினால் அந்த சத்தமானது மிகத்துல்லியமாக 91 மீட்டர் உயரத்திலுள்ள கோட்டையின் மேல் மாடத்தில் எதிரொலிக்கிறது.
சார்மினார் விதான வாயிலையும் இந்த கோட்டையையும் இணைக்கும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை உள்ளதாகவும் உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அதன் இருப்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் ஏதும் இல்லை.