ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகர்ஜுனாசாகர் நகரம் உலகம் முழுக்க வியாபித்து இருக்கும் புத்த மதத்தை சேர்ந்தவர்களின் முக்கிய யாத்ரீக மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. விஜயபுரி என்று பழங்காலங்களில் அழைக்கப்பட்டு வந்த இந்த நகரம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற புத்தரின் தீவிர பக்தரான நாகர்ஜுனாவின் நினைவாக பின்னாளில் நாகர்ஜுனாசாகர் என்று பெயர் பெற்றது. இந்த புத்த துறவி முதலாம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் 60 ஆண்டுகள் புத்த சங்கத்தின் தலைவராக பதவி வகித்தவர். இதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியா முக்கிய புத்த மத மையமாக விளங்கி வந்தது என்பது புலனாகிறது.
நாகர்ஜுனாசாகர் நகரப் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்ற போது புத்த மதம் இப்பகுதிகளில் ஒரு காலத்தில் தழைத்தோங்கி இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஆதராங்கள் பெரும்பாலும் சிற்பங்களாகவும், ஸ்தூபிகளாகவும் இருப்பதோடு, அவை யாவும் புத்தரின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் எடுத்துரைப்பதாக உள்ளன. இதன் காரணமாக நாகர்ஜுனாசாகர் நகரம் தொல்பொருள் முக்கியத்துவத்தையும் பெறுகிறது.
நாகர்ஜுனாசாகர் நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளாக நாகர்ஜுனாசாகர் அணை, எத்திப்போத்தலா அருவி, நாகர்ஜுனாகொண்ட ஆகிய இடங்கள் அறியப்படுகின்றன. இந்த நகரம் ஆந்திர தலைநகரம் ஹைதராபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
அதோடு ஹைதராபாத்திலிருந்தும் ஆந்திராவின் மற்ற பகுதிகளிலிருந்தும் நாகர்ஜுனாசாகர் நகருக்கு எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த நகரில் ரயில் நிலையம் இல்லாத காரணத்தால் சாலை மூலமாக நாகர்ஜுனாசாகரை அடைவதுதான் சிறந்தது.