மைசூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் என்ற பிரம்மாண்டமான பூங்கா தோட்டம் மைசூர் வருகை தரும் பயணிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய அற்புதமாகும்.
காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர் என்ற அணைக்கு கீழே இந்த பூங்கா தோட்டம் அமைக்கப் பட்டுள்ளது. மஹாராஜா நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் பெயரில் 1924 லிருந்து 1932க்குள் கட்டப்பட்டுள்ள இந்த அணை புகழ் பெற்ற பொறியியல் வல்லுநர் சர். எம். விஸ்வேஸ்வரய்யா’வால் வடிவமைக்கப்பட்டது என்பது ஒரு சிறப்பம்சம்.
காஷ்மீரில் உள்ள பிரசித்தி பெற்ற பூங்கா தோட்டமான ஷாலிமார் கார்டனை பின்பற்றி இந்த பிருந்தாவன் கார்டன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறுபது ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பூங்காவில் அழகான மலர் படுக்கைகள், பசுமையான புல் வெளிகள், பலவகையான மரங்கள், பலவடிவங்களில் அமைக்கப்பட்ட நீர் தடாகங்கள், விதம் விதமான நீர் ஊற்றுகள் என்று பல்வேறு எழில் அம்சங்கள் நிறைந்து வழிகின்றன.
இந்த பூங்காவின் மையத்தின் அமைந்துள்ள சிறு குளத்தில் காவேரி தெய்வத்தின் சிலை அமைந்துள்ளது. இந்த குளத்தில் பயணிகள் படகு பயணம் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
பூங்காவின் வடக்கு பகுதியில் இசை நீருற்று ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. இங்கு இசைக்கேற்ப நீரூற்று நடனமாடும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழலாம்.
இந்த தோட்ட்த்தில் விசேஷமான ஒளி விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருப்பதால் இரவில் இவை இந்த பூங்கா முழுவதையும் வண்ண மயமாக மாற்றுகின்றன. இந்த பல வண்ண மின் விளக்குகள் வார நாட்களில் இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் 7 மணி முதல் 9 மணி வரையும் எரிய வைக்கப்படுகின்றன.
பிருந்தாவன் கார்டன்ஸ் பூங்கா தோட்டமானது கர்நாடக மாநில அரசின் காவேரி நீர் பாசனத் துறையின் நேரடி பராமரிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.