ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் காங்க்ரா மாவட்டத்தில் இந்த நூர்புர் எனும் சிறிய நகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 643 மீ உயரத்தில் இந்த சுற்றுலாஸ்தலம் வீற்றிருக்கிறது. இந்தியா சுதந்திரமடைவதற்கு முனபு இந்நகரம் ராஜபுத்திர வம்சத்தவரான பதானிய இனத்தாரால் ஆளப்பட்டு வந்துள்ளது. சந்திரவன்ஷி ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தன்வார் வம்சத்தார் இப்பகுதியை 800 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அக்காலத்தில் பதான்கோட் நகரம் இப்பகுதியின் தலைநகரமாக இருந்திருக்கிறது.
முற்காலத்தில் நூர்புர் தமேரி என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ராணி நூர்ஜஹான் ஒருமுறை இப்பகுதிக்கு விஜயம் செய்தபின்னர் இது நூர்புர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
வழங்கி வரும் கதைகளின்படி இப்பிரதேசத்தின் இயற்கை எழிலால் நூர்ஜஹான் மிகவும் கவரப்பட்டதாகவும் அதனால் இந்த இடத்திலேயே தனக்கான ஒரு மாளிகையை அவர் கட்ட விரும்பியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் அக்காலத்தில் இப்பிரதேசத்தை ஆண்ட ராஜா ஜகத் சிங் பதானியா தனது ராஜ்ஜியத்தில் முகலாய இடையூறுகளை விரும்பாத காரணத்தால் தந்திரமாக ஒரு பொய்க்கதையை பரப்பினார்.
அதாவது இந்த இடத்தின் பருவநிலையானது அக்காலத்தில் புதிதாக தோன்ற ஆரம்பித்திருந்த கழுத்து வீக்க நோயை உருவாக்கும் என்பதாக ஒரு புரளியை பரப்பிவிட்டார். இதை நம்பிய நூர்ஜஹான் இங்கு மாளிகை கட்டும் ஆசையை கைவிட்டார்.
இப்படியாக ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. பின்னர் 1622ம் ஆண்டில் ராஜா ஜகத் சிங் பதானியா இந்த ஊருக்கு நூர்புர் என்று ராணி நூர்ஜஹானின் நினைவாக பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது.
மாம்பழங்கள், ஆரஞ்சு, லைச்சி மற்றும் நெல்லி போன்ற பழங்கள் இப்பகுதியில் பெருமளவில் விளைகின்றன. கோழி வளர்ப்பும் நூர்புர் மக்களின் முக்கியமான தொழிலாக விளங்குகிறது. இவை தவிர பட்டு மற்றும் பஷ்மினா சால்வைகளுக்காக நூர்புர் பகுதி சுற்றுலா அம்சங்களிடையே பிரசித்தி பெற்றுள்ளது.
நாக்னி மாதா கோயில் மற்றும் பிரிஜ் ராஜ் ஸ்வாமி கோயில் ஆகிய இரண்டும் இந்த ஸ்தலத்தின் முக்கியமான கோயில்களாக அறியப்படுகின்றன. இவை சுற்றுலாப்பயணிகள் தவறவிடக்கூடாத அம்சங்களாகும்.
மேலும், பதானியா மன்னர்களால் 10 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நூர்புர் கோட்டை முக்கியமான வரலாற்று சின்னமாக பயணிகளை வரவேற்கிறது. இந்த கோட்டையின் பெரும்பகுதி சேதமடைந்துவிட்ட போதிலும் இதன் கட்டிடக்கலை அம்சங்கள் வரலாற்று ஆர்வலர்களை மிகவும் கவர்வதாக உள்ளது.
நூர்புர் நகருக்கு விஜயம் செய்ய விரும்பும் பயணிகள் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள கக்கால் விமான நிலையம் மூலமாக வரலாம். இந்த விமான நிலையத்திலிருந்து அம்ரித்சர், சண்டிகர் மற்றும் ஜம்மு போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.
நூர்புருக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் பதான்கோட் ஆகும். இது காங்க்ராவிலிருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ளது. சாலைமார்க்கமாக பயணிக்க விரும்பினால் தரம்ஷாலா, பாலம்பூர், பதான்கோட், ஜம்மு, அம்ரித்சர் மற்றும் சண்டிகர் போன்ற நகரங்களிலிருந்து நூர்புருக்கு பேருந்து சேவைகள் உள்ளன.
நூர்புர் நகரின் பருவநிலை குளிர்காலம் தவிர்த்து வருடம் முழுதும் மிதமானதாக காணப்படுகிறது. செப்டம்பர் முதல் ஜுன் வரையிலான மாதங்கள் இப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன.



Click it and Unblock the Notifications