ராம்கர் என்ற அழகிய மலைவாழிடம் உத்தரகண்டிலுள்ள நைனிடால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த இடம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது மலையின் மேல் காணப்படுவது 'மல்லா' என்றும், மலையடிவாரத்தில் இருப்பது 'தல்லா' என்றும் அறியப்படுகின்றன. இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டரிலிருந்து 1900 மீட்டர் வரை இருக்கும். இந்த இடம் பச்சை பசேலென்ற பீச், ஆப்ரிகாட், பேரிக்காய் மற்றும் ஆப்பிள் தோட்டங்களால் சூழ்ந்திருப்பதால், இதனை 'குமாவோனின் பழக்கூடை' என்றும் அழைப்பர்.
நகர வாழ்க்கையின் பரபரப்புக்கும், நெருக்கடிக்கும் மத்தியில் இருப்பவர்களுக்கு சிறந்த இடமாக இது திகழ்கிறது. பனிபடர்ந்த இமயமலையும் அமைதியான சூழலும் மதி மயக்கும் வண்ணம் இருப்பதால், ஒரு நிறைவான சுற்றுலாவை இந்த இடம் அளிக்கும்.
வெள்ளையர்கள் இந்த இடத்தில் கணிசமான அளவு தங்கள் பொழுதை கழித்தனர். இந்த இடத்தின் இயற்கை எழிலில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் நரைன் சுவாமி போன்ற புகழ் பெற்றவர்கள் மயங்கியதின் விளைவே, அவர்களின் ஆசிரமங்கள் இங்கு நிறுவப்பட காரணமாக அமைந்தது.
இங்கு சுற்றுலா வருபவர்கள், மகாதேவி வர்மா என்ற புகழ் பெற்ற எழுத்தாளருக்காக சமர்பிக்கப்பட்ட நூலகத்தை கண்டுக்களிக்கலாம். இந்த நூலகமே அவரை 'லச்மா' என்ற புகழ் பெற்ற கதையை எழுத உந்துகோலாக இருந்தது. அதன்பிறகே இந்த நூலகம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அவருடைய பெயராலேயே அழைக்கப்படலானது.
இங்கே உள்ள பல சுற்றுலாத் தலங்களில், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த ஆசிரமம் இங்கு வருபவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்கிறது.
நேரம் கிடைத்தால், சுற்றுலாப் பயணிகள் குமாவோன் மண்டல் விகாஸ் நிகாம் என்ற ஒய்வு விடுதி, ஸ்ரீ நரைன் சுவாமி ஆசிரமம் மற்றும் கிரிஜா தேவி கோவிலுக்கும் சென்று வரலாம். ராம்கரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் முக்தேஷ்வர் என்ற மற்றொரு குறிப்பிடத்தக்கத் தலமா ஒன்று உள்ளது. இந்த இடம் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட 350 வருட பழமை வாய்ந்த கோவிலுக்கு புகழ் பெற்று விளங்குகிறது.
மேலும் அமைதியான சூழலை கொண்ட நத்துவாகான் என்ற சின்ன கிராமத்துக்கும் நேரமிருந்தால் பயணிகள் சென்று வரலாம். இந்த கிராமத்தை சுற்றி பசுமை நிறைந்த ஓக், பைன், பிர்ச் மற்றும் கப்ஹல் மரங்கள் நிறைந்துள்ளன.
இந்த கிராமம், நவடா, கோன், தல்லாதண்டா, பகீச்சா, தபுக், லமகான், மல்லாதண்டா, கனலா, கபல்தாரி, ஜோப்ரோ, பனோலா மற்றும் பங்கா என்று மேலும் 12 சிறிய கிராமமாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள பாப் அரண்மனை என்ற பாரம்பரிய கட்டிடத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதிகள் உள்ளன.
மலை ஏறுதல், மலை இறங்குதல், மலை மீது பைக் ஓட்டுதல் போன்ற தீர விளையாட்டுக்களை ராம்கரில் விளையாடி மகிழலாம். கோசி ஆற்றில் மகசீர் என்ற மீனை பிடித்து விளையாடுவதும் இங்கு புகழ் பெற்றது. இதே போல் முகாமிடவும் இந்த இடம் சிறந்து விளங்குகிறது. கோசி ஆற்றங்கரை தான் முகாமிட தகுந்த இடமாக உள்ளது.
பண்ட்நகர் விமான நிலையம் தான் ராம்கரிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சீரான விமான சேவைகள் உள்ளன.
கத்கோடம் இரயில் நிலையம் தான் ராம்கரிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம். பயணிகள் இந்த இரயில் நிலையத்திலிருந்து ப்ரீ-பேட் டாக்சிகள் மூலமாக ராம்கர் வந்தடையலாம்.
நொவ்குச்சியாடல் மற்றும் நைனிடாலிலிருந்து பேருந்துகள் மூலமாகவும் ராம்கர் வந்து சேரலாம். கோடைக்காலம் மற்றும் பருவக்காலங்களில் ராம்கர் வருவதே உகுந்த நேரமாகும்.



Click it and Unblock the Notifications