ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள பிரபலமான சுற்றுலாதலம் டேபோ. கடல் மட்டத்திலிருந்து 3050 மீ உயரத்தில் அமர்ந்திருக்கும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளின் கண்களைக் கவரும் காட்சிகளை காட்டவல்லது. லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள டேபோ என்ற இந்த புனிதத்தலம் ஸ்பிதி நதிக்கரையில், பழுப்பு நிற மலைகள் சூழ அமைந்துள்ளது.
இங்கு அமைந்திருக்கும் டேபோ மடாலயம் ஸ்பிதி பள்ளத்தாக்கின் மிகப்பெரிய ராஜ்ஜிய கட்டிடமாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
6300 சமீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த இடம், களிமண்ணாலான செங்கற்களால் கட்டப்பட்ட மாபெரும் சுற்றுச்சுவரை பெற்றுள்ளது. கி.பி.996-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மடாலயத்தில் 9 கோவில்கள், 23 சோர்டன்கள் (Chortens) மற்றும் ஆண், பெண் துறவிகள் தங்குவதற்கான அறைகளை கொண்டதாக உள்ளது.
கொள்கைகளின் வட்டம் (Doctrinal Circle) என்ற பொருளைத் தரும் டேபோ-சோஸ்-கோர் என்ற பெயரில் இந்த மடாலயம் பிரபலமாக விளங்குகிறது.
கட்டிடக்கலையின் அற்புதமாக விளங்கும் இந்த மடாலயம் அதனுடைய பெரிய சிற்பங்களுக்காகவும், ஸ்டக்கோ வகை (சாந்து போன்ற பொருளைப் பயன்படுத்தி சுவர்களில் வரையப்பட்ட) படங்களுக்காகவும், அஜந்தா மற்றும் எல்லோரா குகை ஓவியங்களின் தரத்தில் இங்குள்ள சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களுக்காகவும் மிகவும் புகழ் பெற்ற இடமாகும். எனவே தான் டேபோ 'இமயத்தின் அஜந்தா' என்ற அடைமொழியைப் பெற்றிருக்கிறது.
திபெத் நாட்டின் தோலிங் கோம்பா என்ற இடத்திற்கு அடுத்ததாக அமைந்திருக்கும் டேபோவில் தான் இந்தியாவிலேயே மிகவும் பழமையான பௌத்த மடாலயம் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த மடாலயத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் 10வது மற்றும் 11வது நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். மற்றொரு வகையில் இந்த மடாலயத்தின் முக்கிய கோவிலிலுள்ள ஓவியங்கள் 15வது மற்றும் 20வது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.
இந்திய மற்றும் திபெத்திய கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்து சேரும் இடமாக இருக்கக்கூடிய டேபோதான் இந்தோ-திபெத்திய பாணி என்றழைக்கப்படும் கலையின் தாயகமாக இருக்கிறது.
டேபோ மடாலயத்திலுள்ள கோவில்களில் ஞானோதயம் பெற்ற கடவுளின் கோவில் (The Temple of the Enlightened Gods), தங்கக் கோவில் (The Golden Temple) மற்றும் ஆத்மபலம் கொண்ட மண்டலா கோவில் (The Mystic Mandala Temple) ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடங்களலாகும்.
இதில் டுக்-லா-காங்க் என்ற பெயரில் அழைக்கப்படும் ஞானோதயம் பெற்ற கடவுளின் கோவிலானது ஒரு சபைக் கூடம், புனித இடம் மற்றும் நுழைவு வாயில் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. நான்கு மடிப்பு சிலையாக சபைக் கூடத்தில் அமர்ந்திருக்கும் வைரோகோனா, ஆதிபுத்தரின் ஐந்து புனித புதல்வர்களில் ஒருவராவார்.
உண்மையில் தங்கத்தால் கட்டப்பட்ட தங்கக் கோவில் 16வது நூற்றாண்டில் லடாக்கின் முன்னாள் அரசரான சென்ங்கே நாம்கியால் என்பவரால் மாற்றியமைக்கப்பட்டது. இனிஷியேசன் டெம்பிள் என்றும் அழைக்கப்படும் இந்த ஆத்மபலம் கொண்ட மண்டலா கோவிலில் வைரோகோனாவை சுற்றிலும் எட்டு போதிசத்துவர்கள் (ஞானோதயம் பெற்றவர்கள்) உள்ளதை காட்டும் மிகப்பெரிய ஓவியமும் உள்ளது.
இங்கிருக்கும் போதிசத்துவ மைத்ரேயர் கோவிலானது 20 அடி உயரத்தில் மைத்ரேய புத்தரின் சிலை ஒன்றை கொண்டுள்ளது. இவர் 'சிரிக்கும் புத்தர்' அல்லது 'எதிர்காலத்தின் புத்தர்' என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
ப்ரோம்-ஸ்டோன்-லா–காங் என்ற பெயரில் அழைக்கப்படும் ட்ரோம்டான் கோவில் அதன் கதவுகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்காகவும், சுவர்களில் வரையப்பட்டுள்ள முரல் வகை ஓவியங்களுக்காகவும் மிகவும் புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது.
டேபோ மடாலயத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட கோவிலான பெரிய ட்ரோம்டான் கோவில், 70 சமீ பரப்பளவுடைய தளத்தில் பரந்து விரிந்திருக்கும் 2வது மிகப்பெரிய கோவிலாக உள்ளது. இந்த கோவிலின் முகப்பும், அதையொட்டிய மாடமும் மேலும் 42 சமீ பரப்பளவை பெற்றுள்ளன.
மஹாகலா வஜ்ர-பைரவர் கோவில் 'திகில் கோவில்' என்ற பெயரை சூட்டப்பட்டுள்ள இடமாக இருக்கிறது. இந்த கோவில் பௌத்தமத வகையில் கெலுக்பா என்ற பிரிவைச் சேர்ந்த, ஆக்ரோஷத்திற்கு பெயர் பெற்ற காவல் தெய்வங்களின் சிலைகளை எண்ணற்ற அளவுகளில் கொண்டுள்ளதால் இப்பெயரை பெற்றுள்ளது.
இந்த கோவில்கள் மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்காகவே எண்ணற்ற திபெத்திய ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்'அல்-மா (Z'al-ma) என்றழைக்கப்படுகிற ஓவிய பொக்கிஷ அறையும் டேபோ மடாலயத்தில் உள்ளது.
விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் டாபோ நன்றாக இணைக்கப்பட்டுள்ள இடமாகும். 294 கிமீ தொலைவிலிருக்கும் குல்லு விமான நிலையம் தான் இந்த இடத்திற்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையமாகும். அதே சமயத்தில், 452 கிமீ தொலைவில் உள்ள கல்கா இரயில் நிலையம் அருகிலுள்ள இரயில் நிலையமாக உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் டேபோவிற்கு மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை நீடித்திருக்கும் கோடை காலங்களில் வருவது நல்லதாகும். குளிர்காலங்களில் அதிகமான பனிப்பொழிவு இருப்பதால் டேபோவை அடைவது எளிதான விஷயமாக இருக்காது.



Click it and Unblock the Notifications