தேக்கடி சுற்றுலாத்தலத்தில் இந்த மூங்கில் மிதவை சவாரி அல்லது தெப்பச்சவாரி எனும் வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சம் வேறெங்கும் பார்க்க முடியாத ஒன்றாகும். வரிசையாக மூங்கில்களை பிணைத்து தட்டையான மரப்பலகை போன்று உருவாக்கப்பட்டுள்ள மிதவை அமைப்புதான் தெப்பம் எனப்படுகிறது.
ஒரு காலத்தில் காட்டுவழி ஆற்றுப்போக்குவரத்துக்கு பயன்பட்ட இந்த தெப்பவடிவம் இன்று தேக்கடியில் மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக மாறிவிட்டது. இந்த தெப்ப பயணத்தோடு காட்டுயிர் வேடிக்கை, மலையேற்றம் ஆகியவையும் ஒருங்கிணைந்த சாகச சுற்றுலா சேவையாக தேக்கடியில் வழங்கப்படுகிறது.
இந்த தெப்பச்சுற்றுலாவில் பத்து பயணிகள் மற்றும் ஐந்து வழிகாட்டிகள் என்று குழுக்களாக மட்டுமே பங்கேற்க முடியும். ஆயுதம் ஏந்திய வனக்காவலர் ஒருவரும் இந்த குழுவில் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான வனவிலங்குகள் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை அவசியமாகிறது.
தூய்மையான எழில் ஜொலிக்கும் காட்டின் உட்புறங்களை இந்த தெப்பத்தில் பயணித்தபடியேயும், அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ளேயே மலையேற்றம் செய்தும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
காலை 8 மணிக்கு துவங்கும் இந்த ‘விசேஷ காட்டு சிற்றுலா’மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. உணவு மற்றும் சிற்றுண்டிகளையும் உள்ளடக்கியதாக இந்த சேவை அளிக்கப்படுகிறது.