கேரளா – தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள இந்த பாலருவி நீர்வீழ்ச்சி தேன்மலா சுற்றுலாத்தலத்தின் மற்றொரு முக்கியமான அம்சமாகும். பால் வழிந்து ஊற்றுவதுபோல் நுரையுடன் நீர் வழிவதால் இதற்கு பாலருவி என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது.
நுரைத்துக்கொண்டு ஓடிவரும் சிற்றோடைகள், வெள்ளிக்கம்பி போல் விழும் அருவிகள் என்று இந்த நீர்வீழ்ச்சிப்பிரதேசம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அம்சங்களை கொண்டுள்ளது.
கொல்லம் நகரிலிருந்து 75 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை 4 கி.மீ தூரம் காட்டுப்பகுதி வழியாக மலையேற்றம் செய்து மட்டுமே சென்றடைய முடியும். சூழலியல் சுற்றுலா வளாகத்துக்கு அருகிலேயே உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்வது கூடுதல் பரவச அனுபவமாக இருக்கும். இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பசுமைமாறாக்காடுகள் நிரம்பியுள்ளதால் இயற்கை ரசிகர்களை வசியப்படுத்தும் வகையில் இப்பகுதி தோற்றமளிக்கிறது.
300 அடி உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை நோக்கிய இயற்கைப்பயணம் மேற்கொள்வதற்கு உதவியாக உள்ளூர் காட்டுச்சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர். பயண உபகரணங்கள் மற்றும் பாதை வரைபடங்கள் போன்றவற்றையும் இங்குள்ள வனத்துறை கிளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இயற்கையின் மையப்பகுதியில் வீற்றிருக்கும், நிசப்தம் நிலவும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு தக்க துணை மற்றும் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது அவசியம்.



Click it and Unblock the Notifications