இயற்கை ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து தர காத்திருக்கும் பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயமானது தமிழ்நாட்டிலுள்ள ஆனைமலைக்கும், கேரளாவிலுள்ள நெல்லியம்பதி மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது. செழுமையான தாவரப்பசுமையுடன் காட்சியளிக்கும் இந்த பள்ளத்தாக்குப்பகுதி அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பிரதேசமாகும்.
ஏராளமான காட்டுயிர் அம்சங்கள், பலவகை தாவர இனங்கள் போன்றவற்றை கொண்டுள்ள இந்த சரணாலயம் 285 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. உலகிலேயே பல்லுயிர் சூழலியல் அம்சம் காணப்படும் 34 இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த வனப்பகுதியில் தனியார் வாகனங்கள் நுழைய அனுமதியில்லை.
வனவிலங்குகளை பார்த்து ரசிக்க ‘சஃபாரி’ எனப்படும் காட்டுச்சுற்றுலா வாகனங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகள் காட்டுக்குள் செல்லலாம். புலிகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள், யானைகள், காட்டெருமைகள் போன்ற விலங்குகளை இந்த காட்டுச்சுற்றுலாவின் போது தரிசிக்க வாய்ப்பிருக்கிறது. 134 அரிய வகைப்பறவைகளும் இங்கு வசிப்பதாக ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.
பலவிதமான பூச்சிகள், ஊர்வன மற்றும் நீர்-நில வாழ்வன, மீன்கள், பட்டாம்பூச்சிகள், மூலிகைச்செடிகள் போன்றவற்றை இந்த வனப்பகுதியில் பார்க்கலாம். சுற்றுலாப்பயணிகளுக்காகவே கூடாரங்கள் முதல் மரவீடு வரை பல வகையான தங்குமிட வசதிகளும் இந்த சரணாலயத்தில் செய்யப்பட்டுள்ளன.
சாலை மார்க்கமாக மட்டுமே பாலக்காடு (கேரளா) அல்லது கோயமுத்தூரிலிருந்து (தமிழ்நாடு) இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்ய முடியும். பொள்ளாச்சியிலிருந்தும் (தமிழ்நாடு) பஸ் வசதிகள் உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி முதல் இந்த பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயம் பயணிகளுக்கு திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications