பொன்னும்துருத்து தீவு வர்கலாவிலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. முக்கியமான சுற்றுலா ஸ்தலமான இந்த தீவு ஸ்தலத்தை படகுகள் மூலம் சென்றடையலாம். இந்த தீவு கோல்டன் ஐலேண்ட் அல்லது தங்கத்தீவு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தீவில் ‘துருத்து ஷேத்திரம்’ (தீவுக்கோயில்) என்று பிரசித்தமாக அழைக்கப்படும் சிவன் பார்வதி கோயில் அமைந்துள்ளது. ஒரு நூற்றாண்டு கால பழமையையுடைய இந்த கோயிலுக்கு சொந்தமான தீவுதான் இந்த தங்கத்தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐதீகக்கதை ஒன்றும் இந்த கோயிலைப்பற்றி சொல்லப்பட்டு வருகிறது.
அதாவது, திருவாங்கூர் சமஸ்தான ராணிகள் இந்த தீவுக்கோயிலுக்கு விஜயம் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்ததாகவும், கோயிலுக்கு செல்வதற்கு முன் அவர்கள் தங்கள் ஆபரணங்களை கழற்றி ஒளித்து வைக்கும் வழக்கத்தை கொண்டிருந்ததாகவும் அந்த கதை கூறுகிறது. அதனாலேயே இந்த தீவுக்கு தங்கத்தீவு என்று பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.
பசுமையான தென்னந்தோப்புகளுடன் நாலாபுறமும் நீர் சூழ்ந்திருக்க கனவுச்சோலை போன்று காட்சியளிக்கும் இந்த தீவு பயணிகளை மெய் மறக்க வைக்கும் எழிலுடன் வீற்றுள்ளது. இயற்கை ரசிகர்கள் ஒரு நாள் பயணமாக செல்வதற்கு ஏற்ற தனித்தன்மை வாய்ந்த அழகுத்தீவு இது.