வயநாடு பகுதியில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் ஸ்தலங்களில் இந்த நீலிமலா மலைக்காட்சி தளமும் ஒன்றாகும். சாகசப்பொழுதுபோக்கு விளையாட்டு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இடம் மிகவும் ஏற்றதாகும்.
மலைக்காட்சி தளத்தை நோக்கி செல்லும் மலையேற்றப்பாதையின் வழியே ஏறும்போது ரம்மியமான இயற்கைக்காட்சிகளை நாலாபுறமும் பார்த்து ரசிக்கலாம். நேரம் இருப்பின் கூடாரம் அமைத்து தங்குவதற்கும் இம்மலைப்பகுதி ஏற்றதாக உள்ளது.
சாகச மனம் கொண்ட ரசிகர்கள் விருப்பம் போல் இயற்கை எழிலை சுற்றிப்பார்த்து ரசிப்பதற்கு வசதியாக ஏராளமான ஒற்றையடிப்பாதைகள் இந்த நீலிமலா மலைக்காட்சி தளத்தின் அருகே அமைந்துள்ளன.
இந்த ஒற்றையடிப்பாதைகள் யாவுமே பல காப்பித்தோட்டங்களின் வழியே வளைந்து நெளிந்து செல்கின்றன. இஞ்சிச்செடி மற்றும் பாக்கு மரங்கள் போன்ற தாவரங்களின் நறுமணம் மற்றும் நாக்கு சுவையைவிட நறுமணச்சுவையை அதிகம் தரும் காப்பிக்கொட்டைகளின் வாசனை போன்றவை இப்பகுதியெங்கும் பரவியிருப்பதை மலையில் ஏறிச்செல்லும்போது அனுபவித்து ரசிக்கலாம்.
நீலிமலா மலைக்காட்சி தளத்திலிருந்து காணக்கிடைக்கும் காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘எங்கிருந்தோம் இத்தனை நாள் இந்த காட்சிகளைக் காணாமல்’ என்று உணர்ச்சிப்பிரவாகத்தில் மூழ்க வைக்கும் காட்சிகள் எந்த திசையில் திரும்பினாலும் நம் கண் முன் விரிகின்றன.
கண்ணுக்கெட்டிய தூரம் விரியும் வெல்வெட் பசுமை, ஓவியம் போன்று அலயலையாக நீண்டிருக்கும் சிகரங்கள், வெள்ளிக்கோடாய் வழியும் அருவி, தென்றல் தவழும் புல்வெளிச்சரிவுகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த கானகப்பகுதிகள் என்று சுற்றிலும் கொட்டிக்கிடக்கும் இயற்கை காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இங்கிருந்த மீன்முட்டி நீர்வீழ்ச்சியை முழுமையாக தரிசிக்கும் காட்சியும் பரவசமூட்டுவதாக உள்ளது.
தென்னிந்தியாவில் வசிக்கும் ஒரு இயற்கை ரசிகராக இருக்கும் பட்சத்தில் இந்த சொர்க்கபூமிக்கு ஒரு முறையாவது நீங்கள் விஜயம் செய்வது அவசியம். அது சிரமமான பயணமாகவே இருக்கக்கூடும், ஆனால் ‘வாழ்விலே ஒருமுறை’ எனும் அனுபவமாக அது உங்கள் மனதில் பதிந்துவிடும்.



Click it and Unblock the Notifications