கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குதுரேமுக் ஒரு புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகும். இது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. மடிப்பு மடிப்பாக பசும்புல்வெளிப் பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளுமாக காட்சியளிக்கும் இப்பிரதேசம் ஒரு ‘உயிரியல் பன்முகத்தன்மை’ கொண்ட ஸ்தலமாக அறியப்படுகிறது.
அலையலையாய் பசுமைப் பள்ளத்தாக்குகள்
குதுரேமுக் தேசியப்பூங்காவானது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாகும். இது 600 ச.கி.மீ பரப்பளவில் பசுமைப் பள்ளத்தாக்குகளையும், பசுமை மாறாக்காடுகளையும் கொண்டுள்ளது. இப்பிரதேசம் வருடந்தோறும் 7000 மிமீ மழைப்பொழிவைப்பெறுகிறது.
இந்த மழைப்பொழிவுடன் நீர் சேகரிப்பு குணங்களைக்கொண்ட புல்வெளிப் பள்ளத்தாக்குகளையும் கொண்டிருப்பதால் வற்றாத ஆறுகளான துங்கா, பத்ரா மற்றும் நேத்ராவதி ஆறுகள் இங்கிருந்து உற்பத்தியாகின்றன.
ஈரப்பதம் நிறைந்த பருவநிலையும் அடர்த்தியான கானகமும் பல வகையான காட்டுயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை இங்கு ஏற்படுத்தியுள்ளது. இங்கு காட்டெருமைஃப்கள், புள்ளி மான், குரைக்கும் மான், சாம்பார் மான், மலபார் ராட்சத அணில், பறக்கும் அணில், லாங்குர் குரங்குகள், இந்திய குரங்குகள், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் கீரி போன்ற ஏராளமான வன விலங்குகள் இந்த வனவிலங்கு பூங்காவில் நிறைந்துள்ளன. ஒட்டியுள்ள அடர்ந்த கானகத்தில் புலிகள், சிறுத்தைகள், குள்ளநரிகள் மற்றும் காட்டு நாய் போன்ற வேட்டை விலங்குகளும் வாழ்கின்றன.
குதுரேமுக் பகுதியை சுற்றுலாப்பயணிகள் விரும்புவதற்கான காரணங்கள்
குதுரேமுக் பகுதியில் ஏராளாமான சுற்றுலா அம்சங்கள் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளன. அவற்றில் லக்யா அணை, ராதா கிருஷ்ணா கோயில், கங்கமூலா மலை மற்றும் ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்த நீர்வீழ்ச்சி 100 அடி உயரத்திலிருந்து ஒரு பாறை அமைப்பில் மீது வீழ்கிறது. இந்த அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் ஸ்தலம் குதுரேமுக் பயணத்தின்போது ஒரு சிற்றுலாவாக (பிக்னிக்) செல்வதற்கு ஏற்றது.
பலவிதமான இயற்கை சூழலைக்கொன்டுள்ள குதுரேமுக் பகுதியில் மலையேற்றப்பாதைகள் நிறைய உள்ளன. இவற்றில் பயணம் மேற்கொள்ள நீங்கள் காட்டிலாகா துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றாலும் இந்த சிரமம் காட்டுக்குள் கிடைக்கும் அற்புத அனுபவத்துடன் ஒப்பிடும்போது ஓன்றுமேயில்லை.
குத்ரேமுக்கில் உள்ள எல்லா மலையேற்றப்பாதைகளும் லோபோ எனும் இடத்திலிருந்தே துவங்குகின்றன. இந்த இடம் காட்டுக்குள் குதுரேமுக் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் இந்த இடம் ‘சைமன் லோபோ’ என்பவருக்கு சொந்தமாக இருந்து பல உரிமையாளர்களை கண்டிருந்த போதிலும் இன்னமும் ‘லோபோ’ஸ் ஸ்பாட்’ என்றே அறியப்படுகிறது. இங்கு காட்டுக்குள் வளைந்து நெளிந்து நடைபாதைகளில் சுற்றியுள்ள இயற்கை எழிலை ரசித்தபடியே நடப்பது ஒரு அற்புத அனுபவம்.
பலவிதமான ஆக்கிரமிப்பு முனைப்புகள் நிகழ்கின்ற போதிலும் குதுரேமுக் இன்றும் ஒரு வசீகரமான சுற்றுலாப்பிரதேசமாக தன் இயற்கை வனப்பை எவ்விதத்திலும் இழக்காமல் திகழ்கிறது. ஓய்வான விடுமுறைக்கும், சாகசப்பயணத்துக்கும் ஏற்ற பல்வித அம்சங்கல் நிறைந்த ஒரு மலைவாசஸ்தல சுற்றுலா மையமாக இது புகழ்பெற்றுள்ளது.
பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டியிருக்கும் என்றாலும் இங்கு ஒரு முறை விஜயம் செய்தால் இயற்கை எழில், சாகச பொழுத்போக்குகள், ஆன்மிக ஸ்தல தரிசனங்கள் போன்ற எல்லா அனுபவங்களையும் சுற்றுலா பயணிகள் பெறலாம்.