சிக்கிமிலுள்ள தஷிடிங் மடம் மிகவும் புனிதமாக கருதப்படும் மற்றொரு மடம். இந்த மடம் உள்ள பூமியில் குரு பத்மசாம்பவா எட்டாம் நூற்றாண்டில் சிக்கிமிற்கு அருளினார் என்று நம்பப்படுவதால் இந்த இடம் புனிதத் தன்மை பெறுகிறது. இதய வடிவில் உள்ள மலையில் அமைந்துள்ள இந்த மடம் அழகிய சூழலில் கஞ்செஞ்சுங்கா மலையின் பின்னணியில் அமைந்துள்ளது.
இந்த மடம் 18 ஆம் நூற்றாண்டில் ந்கடக் செம்பா செம்போ என்ற லாமாவால் கட்டப்பட்டது. இவர் சிக்கிமின் முதல் சோக்யலுக்கு முடிசூட்டும் விழாவை முன்னின்று நடத்திய மூன்று லாமாவில் ஒருவராவார்.
இந்த மடம் இங்குள்ள ஒரு தூணுக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த தூணை 'தொங்-வாரங்-டோல்' என்று அழைப்பர். இதற்கு 'பார்வையாலேயே இரட்சிப்பவர்' என்று பொருளாகும். பெயருக்கு ஏற்றது போல் இந்த தூணை வழிபட்டால் பக்தர்களின் பாவங்கள் போகும் என்று நம்பப்படுகிறது.
இந்த மடத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இதனை புனித நீர் திருவிழா என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சந்திர மாதத்தின் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் பூம்சு என்ற விழா கொண்டாடப்படும். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் புனித நீரால் ஆசீர்வதிக்கப்படுவர்.
இந்த புனித நீரை ஒவ்வொரு வருடமும் ஒரு நல்ல நாளில் வெளியே எடுத்து, பின் அதை மீண்டும் உள்ளே வைத்து பத்திரப்படுத்துவர் இந்த மடத்திலுள்ள லாமாக்கள்.