பெங்களூரின் மற்றொரு காட்சி விருந்து இந்த விகாச சௌதா ஆகும். கர்நாடக அரசாங்கத்தால் கட்டபட்ட கட்டிடங்களிலேயே இது மிகச்சிறந்த கட்டிடமாகும். 2005ம் ஆண்டு திறக்கப்பட்ட இது விதான சௌதாவுக்கு தென்புறம் அதன் சகோதர கட்டிடமாக சில அரசாங்க அலுவலகங்களுக்காக கட்டப்பட்டுள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்தோ அல்லது இதர பஸ் நிலையங்களிலிருந்தோ விசாக சௌதாவுக்கு வருவதற்கு அரசு பஸ் வசதிகள் உள்ளன.
இந்த விகாச சௌதாவின் சிறப்பம்சம் இது நவீன கட்டிடக்கலை அம்சங்களுடன் தென்னிந்திய மரபுப்பாணியையும் சேர்த்து கட்டப்பட்டிருப்பதாகும். எட்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த கட்டிட்த்தின் கட்டுமான பரப்பு 58,274 சதுர மீட்டர்களாகும். சுமார் 150 கோடி ரூபாய் இதை கட்டுவதற்கு செலவாகியுள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.
எட்டு தளங்களை கொண்ட இந்த கட்டிட அமைப்பில் 15 ஆலோசனை கூட்ட மண்டபங்களும் 350 க்கும் மேற்பட்ட அலுவலக அறைகளும் உள்ளன. இதை கட்டுவதற்கு பல வருடங்கள் பிடித்துள்ளன. உட்புறம் நுட்பமான கலை அம்சம் கொண்ட மர வேலைப்பாடுகளும் வெளிப்புற சுவற்றில் கல் அலங்கார வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன.
இந்தியாவில் வேறு எந்த சட்டப்பேரவை கட்டிடங்களிலும் காணப்படாத நவீன அம்சங்களும் இந்த பிரமாண்ட அரசாங்க கட்டிடத்தில் காணப்படுகின்றன.மூன்று தளங்களில் 600 கார்களை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதிகளும் இதில் உள்ளன. அதி நவீன பாதுகாப்பு அம்சங்களும் இந்த கட்டிடத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
நவின கட்டிடக்கலை, நாகரிகமான உட்புறங்கள், அதிநவீன பாதுகாப்பு என்று எல்லாம் கொண்டிருக்கும் இந்த கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வடிவமைப்பை கொண்டுள்ளது. சோலார் மின் உற்பத்தி கிரிடுகள், மழை நீர் சேகரிப்பு அமைப்பு போன்றவை அதற்கு சான்றுகளாகும்.
இப்படி ஒரு கண்ணுக்கு விருந்தான மாளிகையை பார்ப்பது உங்கள் பெங்களூர் சுற்றுலா அனுபவத்தில் மற்றும் ஒரு மறக்க முடியா அம்சமாக நிச்சயம் அமையும்.