சோப்தா, உத்தரகாண்ட்டின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ள, ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும் புக்யால்ஸ் என்றழைக்கப்படும் செழுமையான பச்சைப் புல்வெளிகளைக் கொண்டிருப்பதினால் இந்த இடம் ‘குட்டி சுவிட்சர்லாந்து’ என்ற புனைப்பெயர் பெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகள், இங்கிருந்து சௌகும்பா, திரிசூல் மற்றும் நந்தி தேவி ஆகிய மலைத்தொடர்களின் அழகை கண்டு களிக்கலாம்.
இந்த இடம், இந்துக் கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள துங்கநாத் கோயில் இருப்பதினால் பெரிதும் அறியப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3680 அடி உயரத்தில், துங்கநாத் மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த புராதன கோயில் உலகிலுள்ள சிவன் கோயில்களுள் மிக உயரமானதாகவும் திகழ்கிறது.
இந்துப் புராணங்களின் படி, இந்த இடத்தில் தான், இந்து காப்பியமாகிய இராமாயணத்தில் இராமனின் எதிரியாக பாவிக்கப்படும் இராவணன், தன் பாவங்களை எண்ணி வருந்தியதாகக் கூறப்படுகிறது. துங்கநாத் கோயிலை, சோப்தாவிலிருந்து, சுமார் 3.5 கி.மீ தூரம் மலை ஏறினால் அடையலாம்.
மந்தாகினி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள கேதார்நாத் மந்திர், இங்கு வருகை தரும் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு ஆன்மீகத் தலமாகும். பஞ்ச் கேதார்களில் ஒன்றான இக்கோயில், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக உள்ளது.
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். மேலும், சுமார் 200 சிவன் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள மத்யமகேஷ்வர் கோயில், கல்பேஷ்வர் மந்திர் மற்றும் கஞ்சுலா கோரக் கஸ்தூரி மான் சரணாலயம் ஆகியவையும் பெயர் பெற்ற சுற்றுலா ஈர்ப்புகளாகும்.
சோப்தாவின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், சுற்றுலாப் பயணிகளை, முக்கியமாக இயற்கைக் காதலர்களை, கவர்ந்திழுக்கக்கூடியனவாக உள்ளன. மேலும், இது பஞ்ச் கேதார்க்கு செல்லும் மலையேற்றப் பயணிகளின் அடிவார முகாமாகவும் உபயோகிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள், வான் வழி, இரயில் வழி அல்லது சாலை வழி போக்குவரத்து சேவைகளின் மூலம் சோப்தாவை அடையலாம். இம்மலை வாசஸ்தலத்திலிருந்து சுமார் 226 கி.மீ தொலைவில் டெஹ்ராடன்னில் அமைந்துள்ள ஜாலி க்ராண்ட் விமான நிலையமே இதற்கு அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும்.
இது, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன், சீரான இடைவெளிகளில் இயக்கப்படும் விமானங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சோப்தாவிற்கு அருகில் உள்ள இரயில் நிலையம் என்று பார்த்தால் அது ரிஷிகேஷில் உள்ள இரயில் நிலையமே ஆகும். பயணிகள், ஹரித்வார், டெஹ்ராடன் மற்றும் ரிஷிகேஷிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மூலமும் சோப்தாவை அடையலாம்.
மழைக்காலங்கள் மற்றும் கோடைகள், இந்த அழகிய மலை வாசஸ்தலத்திற்கு செல்வதற்கு உகந்த காலங்களாகக் கருதப்படுகின்றன. சோப்தாவில் குளிர்காலத்தின் போது பனிப்பொழிவு இருக்குமாதலால் இக்காலத்தில் இங்கு செல்வதை பயணிகள் தவிர்க்கலாம்.