வன பத்திரகாளி அம்மன் ஆலயம் மேட்டுப்பாளையம் அருகில் அமைந்துள்ள பழமையான கோயிலாகும். பத்திரகாளி அம்மனின் ஆலயமான இது கோயம்புத்தூரில் இருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ளது.
புராணப்படி இக்கோயிலின் மேற்கில் பகாசுரன் வசித்து வந்ததாகவும் இங்குள்ள மக்கள் மத்தியில் பீதி உண்டாகக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மக்கள் பாண்டவ சகோதரர்களில் வலிமையானவனான பீமனிடம் இந்த அசுரனின் கொட்டத்தை அடக்குமாறு வேண்டினர்.
பீமன் காளியிடம் வழிபட்டு அந்த அசுரனை அழிக்க வேண்டிய சக்தியைப் பெற்று அவனுடன் சண்டையிட்டான். பல மணிநேரம் தொடர்ந்த அந்தச் சண்டையின் இறுதியில் பீமன் அந்த அசுரனை வதம் செய்தான்.
மரணப்படுக்கையில் கிடந்த அசுரன் தனது தவறை உணர்ந்து காளி தேவியிடம் தனது பாவங்களுக்கு மன்னிப்புக் கோரினான். தேவியும் அவனை ஒரு காவல் தெய்வமாக மாற்றினார். பக்தர்கள் தேவியை மட்டுமின்றி பீமனையும் பகாசுரனையும் வழிபடுகின்றனர்.