வல்லார்பாடம் சர்ச் அல்லது ‘பசிலிகா ஆஃப் அவர் ரான்சம்’ என்றழைக்கப்படும் இந்த கிறித்துவ தேவாலயம் கேரளா முழுமைக்கும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயமாகும். இங்கு மேரியன்னை ‘வல்லார்பாடத்தம்மா’ என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார். அண்டை மாநிலங்களிலிருந்தும்கூட இந்த தேவாலயத்திற்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கிறித்துவ தேவாலயம் 1524ம் ஆண்டு போர்த்துகீசிய மதப்பிரசாரகர்களால் கட்டுவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 1676ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் வெள்ளத்தில் இது சேதமடைந்ததால் அதே வருடத்தில் போர்த்துகீசியர்களாலேயே இது மறு கட்டுமானம் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் அப்போது மேரியன்னையின் உருவத்தை இந்த தேவாலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கில் காணாமல் போன இந்த மேரி உருவம் பின்னர் அப்போதைய கொச்சின் திவானாக இருந்த பள்ளியத் ராமன் மேனோன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1888ம் ஆண்டு இந்த கிறித்துவ தேவாலயத்துக்கு 13 வது போப் லியோ என்பவரால் விசேஷ அந்தஸ்தும் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் இந்திய யூனியன் அரசாங்கம் இதனை ஒரு முக்கிய புண்ணிய யாத்ரீக ஸ்தலமாக அறிவித்திருந்தது.
ஒரு அணையா விளக்கு ஒன்றும் நீண்ட காலமாக இந்த தேவாலய பீடத்தில் எரிந்து வருகிறது. இந்த விளக்கு கொச்சின் திவான் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும்.
இந்த தேவாலயத்தில் வீற்றிருக்கும் மேரியன்னை தனது பக்தர்களை தீங்குகளிலிருந்து காப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 24ம் தேதி இந்த தேவாலயத்தில் விருந்துத் திருவிழா நடைபெறுகிறது.
அச்சமயம் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பக்தியுடனும் இங்கு குழுமுகின்றனர். எர்ணாகுளம் பொல்காட்டி அரண்மனைக்கு அருகிலேயே இந்த தேவாலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.