பரஸ்நாத் மலைகள் அல்லது ஸ்ரீ சம்மேத ஷிகார்ஜி என்று அழைக்கப்படும் இந்த மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 4480 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிரிதிஹ் பிரதேசத்தில் வீற்றிருக்கும் மலைத்தொடரான இதில் 1350 மீ உயரமுள்ள சிகரம் அமைந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உயரமான சிகரம் என்பது மட்டுமல்லாமல் இமயமலையின் தென்பகுதியின் அமைந்துள்ள உயரமான சிகரம் எனும் பெருமையையும் இது பெற்றிருக்கிறது.
இங்குள்ள பழமையான ஜைனக்கோயில் 1775ம் ஆண்டைச்சேர்ந்ததாக கூறப்படுகிறது. ஜைன மதத்தார் மத்தியில் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக இந்த பரஸ்நாத் மலை ஸ்தலம் பிரசித்தி பெற்றுள்ளது. ஜைன மதத்தின் 24 தீர்த்தங்கரர்களில் 21 பேர் இந்த கோயில் ஸ்தலத்தில் முக்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பரஸ்நாத் என்று அழைக்கப்பட்ட 23 வது தீர்த்தங்கரரின் பெயரிலேயே இந்த மலைப்பகுதி இன்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த மலையை நோக்கிய பயணத்தின் நடுநடுவே தீர்த்தங்கரர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ‘கும்டி’ எனப்படும் சிறு சன்னதிகளை யாத்ரீகர்கள் தரிசிக்கலாம்.
இவற்றில் சில சன்னதிகள் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையை உடையதாக கருதப்படுகின்றன. நெடுங்காலமாக மக்கள் அதிகம் வசிக்காத பூமியாக இருந்து வந்திருக்கும் இப்பகுதியில் காணப்படும் கோயில்கள் அதி நுணுக்கமான அம்சங்களுடன் காட்சியளிப்பது ஒரு பிரமிக்க வைக்கும் வரலாற்று புதிராக கருதப்படுகிறது.
இந்த மலைப்பகுதியை ஒட்டியவாறு அமைந்திருக்கும் வனப்பகுதியின் உள்ளே உஸ்ரி எனும் அழகிய நீர்வீழ்ச்சி ஒன்று வீற்றிருக்கிறது.
இந்த மலைப்பகுதியை 27 கி.மீ தூரத்துக்கு யாத்ரீகர்கள் மலையேற்றம் செய்யவேண்டும் என்பது ஒரு முக்கியமான தகவலாகும். மலையில் ஏற சிரமப்படும் யாத்ரீகர்களுக்காக ‘டோலி வாலா’ எனும் மனிதசுமை தூக்கிகள் இங்கு உதவுகின்றனர்.
மலையேறும்போது கைவிளக்குகளை கொண்டு செல்வதும் அவசியம். மலைப்பாதை வழியில் ஆங்காங்கு தேனீர்க்கடைகள் மற்றும் சிற்றுண்டி கடைகள் அமைந்திருக்கின்றன.
பரஸ்நாத் மலைக்கும் செல்லும் வழியிலேயே கௌதம் ஸ்வாமி மலை மற்றும் சந்திர பிரபு மலை போன்ற இதர மலைப்பகுதிகளும் அமைந்திருக்கின்றன.
பரஸ்நாத் மலைப்பகுதியில் பாராகிளைடிங் மற்றும் பாராசெய்லிங் போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களும் மாநில சுற்றுலாத்துறையின்மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த பரஸ்நாத் மலை ராஞ்சி நகரத்திலிருந்து 168 கி.மீ தூரத்திலும், ஜும்ரி திலேயா மற்றும் ஹஸரிபாக் நகரங்களிலிருந்து 98 கி.மீ தூரத்திலும், தன்பாத் நகரத்திலிருந்து 52 கி.மீ தூரத்திலும், பொகாரோ நகரத்திலிருந்து 57 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
NH2 தேசிய நெடுஞ்சாலையின் பாதையில் அமைந்துள்ளதால் இந்த மலைக்கான போக்குவரத்து வசதிகளுக்கு குறைவில்லை. அது மட்டுமல்லாமல் நிமியா காட் எனும் ரயில் நிலையம் ஒன்றும் இந்த மலைக்கு அருகில் அமைந்துள்ளது. மலைக்கு தென்புறத்தில் இஸ்ரி பஜார் எனும் நகரமும் அருகிலேயே வீற்றிருப்பது சுற்றுலாவுக்கு வசதியாக உள்ளது.



Click it and Unblock the Notifications