கனாட்டல், உத்தரகாண்ட்டில் உள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில், சம்பா-முஸ்ஸூரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இச்சிறுகிராமம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது ஒரு இனிய பொழுதுபோக்குத் தலமாக உள்ளது. பச்சைப் பசேல் என்ற சுற்றுப்புறங்கள், பனி மூடிய மலைகள், ஆறுகள் மற்றும் காடுகள், இந்த இடத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
இங்கு முன்னொரு காலத்தில் இருந்த கனாட்டல் ஏரியின் பெயரிலிருந்தே இதன் பெயர் தோன்றியுள்ளது. ஆனால், தற்போது இந்த ஏரி இருந்ததற்கான சுவடே இல்லை. கனாட்டலின் பல்வேறு அழகிய ஈர்ப்புகளுள், சுர்கந்தா தேவி கோயில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
இங்கு உலவும் ஒரு நாட்டுப்புறக் கூற்றின் படி, இந்து தேவதையான சதியை சிவபெருமான் கைலாச மலைக்குத் தூக்கிச் சென்றபோது, சதியின் தலை இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது.
சதி தேவியின் வெவ்வேறு உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் “சக்தி பீடங்கள்” என்று வழங்கப்படுகின்றன; சுர்கந்தா தேவி கோயில் இந்த சக்தி பீடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும், மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கு கங்கா தசரா திருவிழா, உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
உலகின் உயரமான அணைகளுள் ஒன்றாகக் கருதப்படும் தெஹ்ரி அணை, கனாட்டலில் உள்ள மற்றொரு முக்கிய இடமாகும். பல்வேறு விதங்களில் உபயோகிக்கப்படும் இந்த அணை பாகீரதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு, சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது.
எளிதான நடைப்பயணத்தின் மூலம் அடையக்கூடிய கொடியா காடும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடும் இடமாக உள்ளது. இந்நடைப்பயணத்தின் போது, பயணிகளுக்கு அழகிய பல இயற்கை நீரூற்றுகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. குரைக்கும் மான், காட்டுப் பன்றி, இந்திய மான் வகைகள், மற்றும் கஸ்தூரி மான் ஆகிய விலங்கினங்கள் இக்காட்டில் சாவதானமாகத் திரிவதைக் காணலாம்.
சுற்றுலாப் பயணிகள் கனாட்டலில் இருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள ஷிவ்புரியில், கட்டுமரப் பயணம் மேற்கொண்டு களிப்புறுகின்றனர். ஷிவ்புரி பல்வேறு சிவன் கோயில்களைக் கொண்டு பிரபலமாக இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்.
பயணிகள் இங்குள்ள கடற்கரை முகாம்களில் இராத்தங்கி, மறுநாள் காலை கட்டுமரப் பயணம் செல்லலாம். இங்கு நிலவும் அமைதியான, பரபரப்பற்ற சூழல் உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கக்கூடியதாக உள்ளது.
வான், இரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்துகள், நாட்டின் பல்வேறு பகுதிகளுடனும் கனாட்டலை இணைக்கின்றன. சுமார் 92 கி.மீ தொலைவில் டெஹ்ராடன்னில் உள்ள ஜாலி க்ராண்ட் விமான நிலையமே இதற்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும்.
டெஹ்ராடன் மற்றும் ரிஷிகேஷ் இரயில் நிலையங்கள் இதற்கு அருகில் அமைந்துள்ள இரயில் நிலையங்கள் ஆகும். சுற்றுலாப் பயணிகள், முஸ்ஸுரி, ரிஷிகேஷ், சம்பா, டெஹ்ராடன், ஹரித்வார் மற்றும் தெஹ்ரி ஆகிய ஊர்களிலிருந்து, சொகுசுப் பேருந்துகள் மற்றும் சாதாரண பேருந்துகள் மூலமும் இக்கிராமத்தை அடையலாம்.
கனாட்டலில், கோடைகள் சுற்றிப் பார்ப்பதற்கும், குளிர்காலங்கள் சாகச விளாயாட்டுக்களில் ஈடுபடுவதற்கும் உகந்தவையாகக் கருதப்படுகின்றன.