டெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், இங்கிருக்கும் மதஸ்தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு குவிகிறார்கள். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் ஏராளமான இந்துக் கடவுள்களின் பிரகாரமாகத் திகழ்கிறது.
இங்கிருக்கும் ஆசிரமங்களுக்காகவும், பழமைவாய்ந்த கோவில்களுக்காகவும் பல்தூரப் புகழ் பெற்று விளங்குகிறது ரிஷிகேஷ். மேலும் அனுபவமிக்க குருக்களால் இங்கு யோகா மற்றும் தியான வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
இந்து புராணங்களின் படி ராமாயணத்தின் வில்லனான ராவணனைக் கொன்ற பின்பு ராமன் இங்கு நீராடியதாக நம்பப்படுகிறது. இதே இடத்தில் தான் ராமனின் தம்பியான லட்சுமணன் சணல் கயிற்றால் ஆன பாலம் அமைத்து நதியைக் கடந்ததாகவும் சொல்லப்படுகிறதது.
அந்தப் பாலம், லக்ஷ்மண ஜூலா என்று வழங்கப்படுகிறது. 1889ல் மரக்கொப்புகளால் கட்டப்பட்ட பாலம் பின் 1924ஆம் ஆண்டு இரும்பினால் அமைந்த தொங்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.
சிவாலிக் மலைகளின் பதிமூன்று முக்கிய கடவுள்களுள் ஒன்றான சதி அம்மனுக்காக இங்கு குஞ்சாபுரி என்ற கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. புராணங்களின்படி தன் மனைவியான சதியை சிவபெருமான் கைலாச மலைக்கு சுமந்து சென்ற போது சதியின் மேல்பாகம் இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது.
சிவன் தன் இறந்து போன மனைவியை சுமந்து செல்லும் போது மனைவியின் இடுப்புப்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் எழுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பங்கஜா மற்றும் மதுமதி ஆகிய நதிகள் சந்திக்கும் இடத்தில் நீல்கந்த் மஹாதேவ் கோவில் உள்ளது.
இக்கோவிலைச் சுற்றி விஷ்ணுகூத், மணிகூத், பிரம்மகூத் ஆகிய குன்றுகள் அமைந்திருக்கின்றன். இந்துக்களின் முக்கியப் பண்டிகையான சிவராத்ரியின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
திரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக் கூடாத முக்கிய தளமாகும். குப்ஸ் என்ற சந்நியாசிக்கு யமுனை நதி பரிசாக அளித்த நீரால் இந்த குளம் நிரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. பழபெரும் ரகுநாத் கோவிலின் பிம்பத்தை பக்தர்கள் இக்குளத்தின் நீரில் காணலாம்.
இங்கிருக்கும் தியான மண்டபத்துடனான வஷிஷ்டர் குகை மற்றொரு முக்கியமான இடமாகும். சாகசப் பிரியர்களுக்கு பிடித்தமான வகையில் இது தங்குமிடமாகவும் திகழ்கிறது. குகைக்கு அருகில் முக்கியமான தியான ஸ்தலமான ஸ்வாமி புருஷோத்தமானந்தா அவர்களின் ஆசிரமம் அமைந்திருக்கிறது.
இதுமட்டுமல்லாது ஸ்ரீபாபா விஷுதா நந்தாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட காளி காம்ளிவாலெ பஞ்சாயத்தி ஷேத்ரா என்ற புகழ்பெற்ற ஆசிரமம் இங்கு உள்ளது. அதன் தலைமையகம் ரிஷிகேஷிலும், கிளைகள் கார்வால் எங்கும் பரவி இருக்கிறது.
பயணிகளின் வசதிக்காக தங்குமிட வசதிகளும் செய்துதரப்படுகிறது. ரிஷிகேஷில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற ஆசிரமம் சுவாமி சிவானந்தாவால் உருவாக்கப்பட்டு கங்கைக் கரையில் இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் சிவானந்த ஆசிரமம் ஆகும்.
1967ல் உருவாக்கப்பட்ட ஓம்கிரானந்தா ஆசிரமத்தையும் பயணிகள் கண்டுகளிக்கலாம். சமூக, கலாச்சார மற்றும் படிப்பு வளர்ச்சிக்காக இந்த ஆசிரமம் பணியாற்றி வருகிறது. சுவாமி ஓம்கிரானந்தாவின் தலைமையில் இந்து சாதுக்கள் இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருகிறார்கள்.
நேரமிருப்பின், ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிவபுரி கோவிலையும் பயணிகள் காணலாம். சிவன் கோயிலான இது கங்கை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
படகு சவாரிக்கு ஏற்ற இடமாகவும் இது விளங்குகிறது. மேலும் நீல்கந்த் மகாதேவ் கோவில், கீதா பவன், ஸ்வர்க ஆசிரம் ஆகியவை ரிஷிகேஷில் உள்ள மற்ற புகழ்பெற்ற இடங்களாகும்.
புனிதப்பயணம் செல்ல விரும்புபவர்களை மட்டுமல்லாது சாகசப் பிரியர்களையும் ஈர்க்கும் வண்ணம் பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது ரிஷிகேஷ். மலைகளுக்கு நடுவே இருப்பதால் மலையேற்றத்துக்கு ஏதுவான இடமாக திகழ்கிறது.
கார்வால் இமாலயப் பாதை, புவானி நீர்குத், ரூப்குந்த், கெளரி பாதை, காலிந்து கால் மலைப்பாதை, கன்குல் கால் மலைப்பாதை மற்றும் தேவி தேசியப் பூங்கா ஆகியவை இங்கு அமைந்திருக்கும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதைகளாகும். மலையேற்றத்துக்கு தகுந்த மாதங்களாக ஃபிப்வரி முதல் அக்டோபர் வரை கருதப்படுகிறது.
அதுமட்டுமல்லாது இவ்விடத்தில் படகு சவாரி என்ற சாகச விளையாட்டும் புகழ்பெற்று விளங்குகிறது. அனுபவமிக்கவர்களின் துணையோடு இவ்விளையாட்டை பயணிகள் மேற்கொண்டு மகிழலாம்.
ரிஷிகேஷ் செல்லும் வழியில், கயிற்றில் நடந்து நதியைக் கடக்கும் 'நதி தாண்டுதல்' என்ற மற்றொரு சாகச விளையாட்டிலும் பயணிகள் ஈடுபடலாம்.
விமானம் மூலம் ரிஷிகேஷை அடைய பயணிகள் 18கிமீ தொலைவில் அமைந்துள்ள டெஹ்ராடூன் ஜாலி க்ராந்த் விமானநிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, கொத்வார், டெஹ்ராடூன், ஹரித்வார் ஆகியவற்றுக்கு ரயில் வசதி உள்ளது. ரிஷிகேஷுக்கு சாலை வழியாக பயணிக்க விரும்புவோர் டெல்லி, டெஹ்ராடூன், ஹரித்வாரில் இருந்து தனியார் கார்கள் மற்றும் பேருந்து வழியாக இலக்கை அடையலாம்.
வருடத்தின் பெரும்பகுதி ரிஷிகேஷில் மிதமான தட்பவெட்ப நிலையே நிலவினாலும் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் தகிக்கும் மே மாதத்தில் பயணிகள் போக வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது.