பழமையான கோவில் நகரமான காரைக்காலில், உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரன் கோவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத்தலாமாக உள்ளது. இதன் மணல் நிரம்பிய கடற்கரை, பிரெஞ்சு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரிய முத்திரை, அழகிய கோவில்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை காரைக்காலை நோக்கி சுண்டியிழுக்கும் அம்சங்களாகும்.
மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியான பாண்டிச்சேரியின் ஒரு பகுதியாக, சோழமண்டல கடற்கரையில் வங்காள விரிகுடாவின் மடியில் தவழும் முக்கியமான துறைமுக நகரம் காரைக்கால் நகரமாகும்.
இந்த துறைமுக நகரம் தலைநகரம் பாண்டிச்சேரியிலிருந்து 132 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்காக 300 கிமீ தொலைவிலும் மற்றும் திருச்சியிலிருந்து 150 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் டெல்டா பகுதிகளில் இரண்டாமிடத்தை காரைக்கால் பெற்றுள்ளது. 'காரை' மற்றும் 'கால்' என்று பிரித்தெழுதப்படும் காரைக்கால் நகரத்தின் பெயருக்கு சில காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்று 'எலுமிச்சை கலக்கப்பட்ட கால்வாய்' என்று நம்பப்படுகிறது.
ஆனால் இன்றைய காலத்தில் அப்படியொரு கால்வாயை இந்த நகரத்தில் காண முடியவில்லை. ஜீலியன் வின்சன் என்பவரின் கூற்றுப்படி, சமஸ்கிருதத்தில் இந்த நகரத்தின் பெயர் காரகிரி என்பதாகும். காலனிய அலுவலகப் பதிவேடுகளில் காரைக்கால் என்ற பெயருக்கு 'மீன் கணவாய்' என்று பொருள் வழங்கப்பட்டுள்ளது.
காரைக்காலை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
காரைக்கால் நகரம் அதன் கோவில்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இந்நகரத்திலிருக்கும் முக்கிய பார்வையிடங்களாக சனீஸ்வரர் கோவில், ஸ்ரீ கைலாசநாதர் கோவில், நவகிரக கோவில்கள் மற்றும் அம்மையார் கோவில் ஆகியவற்றை சொல்லலாம்.
கோவில்களை சுற்றிப் பார்ப்பது மட்டுமல்லாமல், ஹாயாக கடற்கரைக்கு செல்லவும், வங்காள விரிகுடாவின் கழிமுக நீர்ப்பகுதிகளில் படகுச் சவாரி செல்லவும் முடியும்.
மேலும் காரைக்காலில் உள்ள கீழ காசக்குடி மற்றும் மேல காசக்குடி ஆகிய கிராமங்கள் அவற்றின் வரலாற்று சான்றுகளுக்காக முக்கியத்துவம் பெற்ற இடங்களாகும். குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களான நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களும் காரைக்காலுக்கு மிகவும் அருகிலுள்ள இடங்களாகும்.
வரலாறு மற்றும் பாரம்பரியம்
இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காரைக்காலுக்கு வளமான வரலாறும், பாரம்பரியமும் உள்ளது. எட்டாவது நூற்றாண்டில் பல்லவர்கள் ஆட்சி செய்ய தொடங்கியதிலிருந்து காரைக்காலின் வரலாறும் துவங்குகிறது.
அதன்பிறகு, என்ன நடந்தது என்று தெளிவான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. பின்னர், 18வது நூற்றாண்டில் தஞ்சை மன்னர்கள் இந்த பகுதியை ஆண்ட போது தான் காரைக்கால் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் துவங்கியது.
1738-ஆம் ஆண்டில் பிரெஞ்சு அதிகாரியான டூமாஸ் தஞ்சை மன்னர் சாகுஜீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், அதன் பிறகு 1739-ஆம் ஆண்டு காரைக்கால் பிரான்சினால் கைப்பற்றப்பட்டது.
1761-ஆம் ஆண்டு பிரான்ஸ், ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட போது இந்நிலப்பகுதி இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்கு வந்து, அதன் பின், 1814-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் நிகழ்ந்த பாரிஸ் உடன்படிக்கையின் விளைவாக இங்கிலாந்து, காரைக்கால் நகரை பிரான்சிற்கு திரும்ப கொடுத்து விட்டது.
இந்த உடன்படிக்கை காலத்திற்குப் பிறகு 1954-ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகள் காரைக்கால் பிரான்சின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
காரைக்கால் நகரத்திற்கு வருவது எப்படி?
காரைக்காலுக்கு மிக அருகிலிருக்கும் விமான நிலையம் சென்னை விமான நிலையமாகும். இங்கிருந்து சாலை வழியாக 7 முதல் 9 மணி நேரம் பயணம் செய்வதன் மூலம் காரைக்காலை அடைய முடியும்.
காரைக்கால் நகரத்திலேயே விமான தளம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இது 2014-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டு விடும். காரைக்காலுக்கு மிகவும் அருகிலிருக்கும் ரயில் நிலையமாக 10 கிமீ தொலைவில் உள்ள நாகூர் ரயில் நிலையம் அறியப்படுகிறது.
தனியார் பேருந்துகள் பல பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் பேருந்துகள் உள்ளூர் போக்குவரத்து தேவைகளை செவ்வனே செய்தும் வருகின்றன.
காரைக்காலின் பருவநிலை
இந்தியாவின் தென்பகுதியிலுள்ள பிற கடற்கரை பகுதிகளை போலவே காரைக்காலும் அதிக வெப்பமான கோடைக்காலத்தைப் பெற்றிருக்கிறது. எனவே, காரைக்காலுக்கு சுற்றுப்பயணம் செய்ய சிறந்த மாதங்களாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலுள்ள மாதங்களை சொல்லலாம்.
இந்த மாதங்களில் காரைக்காலின் பருவநிலை புத்துணர்வூட்டுவதாகவும் மற்றும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கும். அழகு, அமைதி மற்றும் தனிமையை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலம் காரைக்கால் ஆகும்.