ஹிமாச்சல பிரதேசம் கீலாங்கிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்டங் மடாலயமானது ஒரு பழமையான கோம்பாவாகும் (Gompa). கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்திலுள்ள இந்த மடாலயம் பாகா நதிக்கரையில் அமைந்துள்ளது.
இது பெளத்த த்ருப்கா கக்யுட் பள்ளியின் கீழ் வரும் 900 ஆண்டு பழமையான மடாலயமாகும்.12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மடாலயம் நாட்டின் மிகப்பெரிய புத்த மத நூலகத்தை கொண்டுள்ளது.
இந்நூலகத்தில் போட்டியா மற்றும் ஷெர்பா மொழியில் எழுதப்பட்ட கங்க்யுர் மற்றும் தங்க்யுர் வேத வசனங்கள் உள்ளன. இந்த மடாலயத்தில் தங்க்கா ஓவியங்கள், இசைக்கருவிகளான வீணை, பறை, கொம்பு, மற்றும் பழைமையான ஆயுதங்களின் பெரிய தொகுப்பு உள்ளது. இந்த கோம்பா லாமா நொர்பு ரின்போக் என்பவரால் 1912 ஆம் ஆண்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
அவரது இறப்புக்குப்பின் அவரின் மண்டையோடு மற்றும் சாம்பல் முதல் அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பத்மசாம்பவர் மற்றும் தாரா தேவி சிலைகளை இங்கு காணலாம்.
பிரார்த்தனைக்கூடமாக விளங்கும் இரண்டாவது அறை பதினோரு தலைகளையுடைய அவலோகிதேஸ்வரா சிலையைக்கொண்டுள்ளது. மூன்றாவது அறையில் வெண்கல மணி கொண்ட 6 அடி உயர மரத்தாலான பிரார்த்தனைச்சக்கரம் ஒன்று உள்ளது.
மடாலயத்தில் வாழும் துறவிகள் மற்றும் சன்யாசிகள் சம உரிமையோடு குடும்ப வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். துறவிகள் கோடை காலத்தில் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து, குளிர் காலத்தில் மீண்டும் இங்கு திரும்பி விடுவர். மடாலயத்தில் புனித ஆறு அசை மந்திரமான 'ஓம் மணி பத்மே ஹம்' என்று ஒலிக்ககூடிய ஒரு பெரிய அளவிலான பிரார்த்தனைப்பறையும், மில்லியன் முறை தாளில் எழுதப்பட்ட இம்மந்திரமும் வைக்கப்பட்டுள்ளன.