‘இந்தியாவிலேயே இது போன்ற ஒரே ஒரு மியூசியம்’ என்ற பெருமையை இந்த ‘பே ஐலண்ட் டிரிஃப்ட்வுட் மியூசியம்’ என்று அழைக்கப்படும் அருங்காட்சியகம் பெற்றுள்ளது.
‘டிரிஃப்ட்வுட்’ எனப்படும் நீரால் அடித்து வரப்பட்டு மக்கிக்காய்ந்த பலவித மரங்களால் செய்யப்பட்ட அல்லது இயற்கையாய் உருவான அழகுச்சிற்பப் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இயற்கையாக பலவித உருவங்களாக மாறியுள்ள மரவடிவங்களும், மனிதக்கற்பனை ஆற்றல் மூலம் இம்மாதிரியான மரங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படைப்புகளும் இந்த தனித்தன்மை வாய்ந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள பல அழகான மரச்சிற்பங்கள் பொதுவாக மரங்களின் வேர்களால் உருவாகியுள்ளன. கடல் நீரால் பல காலம் அரிக்கப்பட்டும் வளைக்கப்பட்டும் இவை இம்மாதிரியான மரச்சிற்ப வடிவங்களாக மாறியுள்ளன.
இவை தேடி கண்டெடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பூச்சு பூசப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகமானது திருமதி. ராஜி புன்னூஸ் என்பவரின் உழைப்பிலும் முயற்சியிலும் உருவாகியுள்ளது. இவரே தற்போது இந்த மியூசியத்தின் பொறுப்பாளராகவும் உள்ளார்.
கேரள அரசாங்கம் இந்த அருங்காட்சியகத்தின் தனித்தன்மையான கலாபூர்வ மதிப்பிற்காக 2004ம் ஆண்டில் மிக சிறந்த ‘ நூதனமான சுற்றுலா கருத்தம்ச திட்டம்’ என்பதற்கான விருதினை வழங்கியுள்ளது.
2001ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ‘லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அனுபவமிக்க கலைரசிகர்கள் மற்றும் சாதாரண சுற்றுலாப்பயணிகள் என்று அனைத்து தரப்பினரையும் வசீகரிக்கும் மரச்சிற்ப வடிவங்கள் இந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை.
ஞாயிற்றுக்கிழமைகளில்: காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை
திங்கட்கிழமை விடுமுறை



Click it and Unblock the Notifications