கும்பல்கர் கோட்டை 15-ஆம் நூற்றாண்டில் ரானா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மேவார் சாம்ராஜ்ய கோட்டை பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது.
ராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.
கும்பல்கர் கோட்டை 13 சிகரங்களாலும், காவல் கோபுரங்களாலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் 36 கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்கிறது.
இதன் நீளமும், வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிட பாணியும் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தக் கோட்டையின் சுவர், சீனப்பெருஞ்சுவருக்கு பிறகு உலகின் மிக நீளமான சுவராக கருதப்படுகிறது.
மேலும் இந்தக் கோட்டையில் மகாராண பதே சிங் எனும் மன்னரால் கவிகை மாடங்களுடன் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் உள்ளது.
கும்பல்கர் கோட்டையில் உள்ள ஏழு மிகப்பெரிய நுழைவாயில்களில் ராம் போல் என்ற வாயில் மிகவும் பெரியதாக கருதப்படுகிறது. அதோடு இங்கு வரும் பயணிகள் ஹனுமான் போல் என்ற வாயிலின் அருகே இருக்கும் கோயலுக்கு சென்று வழிபடலாம்.
இவைதவிர ஹுல்லா போல், பாக்ரா போல், நிம்பூ போல், பைரவா போல் மற்றும் டாப்-கானா போல் ஆகிய நுழைவாயில்களையும் இந்தக் கோட்டை கொண்டுள்ளது. மேலும் இந்தக் கோட்டையின் உச்சியிலிருந்து அருகிலுள்ள பகுதிகளின் கவின்மிகு தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் கும்பல்கர் கோட்டைக்கு உட்புறம் கர்தார்கர் என்ற இன்னொரு கோட்டையும் அமைந்திருக்கிறது.