சுஹேலி பார் என்று அறியப்படும் இந்த தீவுக்கூட்டம் சுஹேலி வலியக்கரா மற்றும் சுஹேலி செரியக்கரா என்று இரண்டு சிறிய தீவுகளை உள்ளடக்கியதாகும். இவை அகத்தி தீவிலிருந்து 75 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன.
இந்த இரண்டு தீவுகளும் பெரிய நீள் வட்ட வடிவத்தில் விளக்கின் வெளிச்ச விளிம்பு போன்று காட்சியளிக்கும் மரகதப்பச்சை நிறத்தில் ஜொலிக்கும் தரைக்கடல் பகுதியை கொண்டுள்ளன.
இந்த தரைக்கடல் பகுதியில் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே காணப்படும் ஒரு நீண்ட மெல்லிய மணல் திட்டுப்பகுதி பலவித பறவைகள் வசித்து இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது.
சுஹேலி பார் தீவுப்பகுதியானது அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான பருவத்தில் ட்யூனா மீன்கள் பதப்படுத்தப்படும் தற்காலிக கேந்திரமாகவும் திகழ்கிறது. அச்சமயம் அருகிலுள்ள தீவுகள் மற்றும் அகத்தி தீவுகளிலிருந்து மீனவர்கள் இங்கு வருகை தந்து தற்காலிக குடியிருப்புகளையும் ஏற்படுத்திக்கொள்கின்றனர்.
தனிமையில் ஓய்வெடுத்து தீவுச்சொர்க்கத்தின் சூழலை நன்கு ரசித்து மகிழ இந்த சுஹேலி பார் தீவுகள் மிகவும் ஏற்றவையாகும். இருப்பினும் நன்கு திட்டமிட்டுக்கொண்டு தேவையான பொருட்களுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.
வியாபாரமயமாகிவிட்ட எத்தனையோ சுற்றுலாத்தலங்களை விடவும் இந்த சுஹேலி பார் தீவுகள் ஒரு வித்தியாசமான விடுமுறையை அளிக்க அரபிக்கடலில் வீற்றிருக்கின்றன.