பாரா இமாம்பாரா எனும் பெயருக்கு மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் என்பது பொருளாகும். இது அஸ்ஃபி உத் தௌலா எனும் நவாப் மன்னரின் நினைவாக அஸ்ஃபி இமாம்பாரா என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
இவர்தான் இந்த வழிப்பாட்த்தலத்தை 1783ம் ஆண்டில் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நகரத்தில் உள்ள பிரதானமான வரலாற்றுச்சின்னங்களில் ஒன்றாக இந்த இமாம்பாரா வீற்றிருக்கிறது.
இந்த வளாகத்தில் ஒரு வழிபாட்டு சன்னதி, புல் புலையான் எனும் சுற்றுப்பாதை, பாவ்லி எனப்படும் ஒரு படிக்கிணறு மற்றும் ஒரு குடை மாடத்தின் கீழ் அமைப்பப்பட்டுள்ள நவாப்பின் கல்லறை போன்றவற்றை காணலாம்.
இந்த பாரா இமாம்பாரா முழுக்க முகாலயர் கால அலங்கார நுணுக்கங்களை கொண்டுள்ளது. இக்காலத்திய பாகிஸ்தானில் உள்ள லாகூர் பாத்ஷாகி மசூதியிலும் இதே போன்ற அம்சங்களை காண முடிகிறது. அது உலகிலுள்ள ஐந்து மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தனித்தன்மையான அம்சமாக இந்த மசூதி முழுக்க இரும்பு பயன்படுத்தாமலே உருவாக்கப்பட்டிருப்பதை குறிப்பிடலாம். மேலும் இதில் ஐரோப்பிய பாணி அம்சங்கள் எதுவுமே இடம் பெறவில்லை.
50x16x15 மீட்டர் என்ற அளவில் அமைந்துள்ள இதன் மையக்கூடத்தில் எந்தவிதமான தாங்கு சாரங்களும் பயன்படுத்தப்படவில்லை என்பது வியப்பூட்டும் ஒரு உண்மையாகும்.
மேலும் இங்குள்ள ஒரு புதிர்ப்பாதை குழப்பமான சந்துகள் மற்றும் ஒன்றோடன்று இணைக்கப்பட்ட கதவு வழிகள் என்று ஒரு சுவாரசியமான கட்டுமானமாக காட்சியளிக்கிறது.
இதில் மொத்தம் 489 கதவுவழிகள் உள்ளன. இங்கிருந்து ஒரு மைல் நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதை கோமதி ஆறு வரை செல்கிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த சுரங்கப்பாதை தற்போது கண்ணில் தென்படவில்லை.