ஷாஹீத் ஸ்மரக் அல்லது தியாகிகள் நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா வளாகம் லக்னோ நகர வளர்ச்சி ஆணையத்தின் மூலம் அமைக்கப்பட்டிருக்கிறது.
1857ம் ஆண்டில் வெடித்த முதல் இந்தியச்சுதந்திரப்புரட்சியின்போது உயிர் துறந்த முகம் தெரியாத எண்ணற்ற வீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நினைவு வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த புரட்சியில் அப்போது லக்னோ நகரை ஆண்டுவந்த அரச வம்சத்தினரும் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடுகடத்தப்பட்ட நவாப் வாஜித் அலி ஷாவின் மனைவியான பேஹம் ஹஸ்ரத் மஹால் அந்த சுதந்திரப்புரட்சியை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவராவார்.
பூங்கா வளாகத்தை உள்ளடக்கிய இந்த நினைவுச்சின்னம் டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜ்யோதியை போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
1857ம் வருட சிப்பாய் புரட்சியின் சின்னமாக எழும்பியிருக்கும் இந்த நினைவுச்சின்னத்தை புகழ் பெற்ற கட்டிடக்கலை நிபுணரான பிரசன்ன கோத்தாரி வடிவமைத்துள்ளார்.
கோமதி ஆற்றங்கரையில் ஒரு வெண் பளிங்குக்கல் பீட அமைப்பில் எழுப்பட்டிருக்கும் வெண்பளிங்குக்கோபுரம் மற்றும் அதைச்சுற்றி அழகிய பூங்காத்தோட்டம் ஆகியவற்றைக்கொண்டதாக இந்த நினைவுச்சின்னம் அமைந்திருக்கிறது.
நகர மையத்திலேயே வீற்றுள்ள இந்த நினைவுச்சின்னத்துக்கு அருகில் ஒரு பெரிய கலையரங்கம் மற்றும் நூலகம் ஆகியவையும் அமைந்துள்ளன.
மேலும், புர்ஹா தலாப் மற்றும் 500 வருட பழமையை உடைய துதாதாரி கோயில் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்களும் இந்த நினைவுச்சின்னத்துக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications