உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிக முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக இந்த கௌசாம்பி நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான யாத்ரீகர்களை இது ஈர்த்துவருகிறது. இந்த புனித ஸ்தலத்தில் தான் புத்தர் தனது ஆன்மீக உரைகளை வழங்கியதாக சொல்லப்படுகிறது. அக்கறையின்மையின் விளைவாக இந்த நகரம் சிதிலமடைந்து இடிபாடுகளுடன் காணப்பட்டாலும் கோட்டைகள், ஸ்தூபிகள் மற்றும் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இதர முக்கியமான வரலாற்றுச்சின்னங்கள் இந்த யாத்ரீக ஸ்தலத்தில் நிரம்பியுள்ளன.
கௌசாம்பி மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
புத்த மதத்தை சேர்ந்தவர்களின் முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக புகழ் பெற்றிருக்கும் கோசாம்பி நகரத்தில் புத்தரோடு தொடர்புடைய பல நினைவுச்சின்னங்களும் ஸ்தலங்களும் நிரம்பியுள்ளன.
இங்கு பழைய கோசாம்பி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது ஒரு அசோகத்தூண் மற்றும் கோஷித் ராம் மடாலயம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
இந்த கோஷித் ராம் விஹாரை புத்தர் பல ஆண்டுகள் வசித்த இடமாக சொல்லப்படுகிறது. கௌசாம்பியில் உள்ள திகம்பர் ஜெயின் கோயிலுக்கும் ஏராளமான ஜைன யாத்ரீகர்கள் விஜயம் செய்கின்றனர்.
இங்குள்ள ஷீத்லா கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிரது. அது தவிர காமாஷி தேவி கோயில் மற்றும் துர்க்கா தேவி கோயில்களும் இங்கு கணிசமான ஹிந்து யாத்ரீகர்களை ஈர்த்து வருகின்றன.