வைகை ஆற்றின் தென்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாநகரின் அடையாளமாக வீற்றிருக்கும் மீனாட்சியம்மன் கோயில் ஒரு பிரசித்தமான புராதன சைவத்திருத்தலமாகும்.சமீபத்தில் புதிய உலக அதிசயங்களில் இடம் பெறவேண்டிய பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இக்கோயிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாமரை மலரின் மைய மொட்டாக இந்த கோயில் வீற்றிருக்க சுற்றிலும் இதழ்கள் விரித்தாற்போன்று மதுரை மாநகரின் புராதன தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களை தாங்கியதாக இன்றும் விளங்குகின்றன.
சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கான இந்த கோயிலானது பெண் சக்தியை முன்னிறுத்தும்விதமாக அவரது மனைவி மீனாட்சியின் பெயரிலேயே அறியப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.
மீனாட்சியை வணங்கியபின் சுந்தரேஸ்வரரை வணங்குவது இக்கோயிலில் பின்பற்றப்படும் ஐதீக மரபாகும். மதுரையில் அவதரித்திருந்த மீனாட்சியை மணப்பதற்காக சிவபெருமான் மதுரைக்கு விஜயம் செய்ததாக புராணிக ஐதீகம் கூறுகிறது.
சொக்கநாதர் என்ற பெயரிலும் இக்கோயிலில் உறையும் சிவபெருமான் அறியப்படுகிறார். சிவனின் பெருமைகளைக்கூறும் திருவிளையாடல் புராணத்தில் இந்த கோயில் முக்கிய களமாக விவரிக்கப்பட்டுள்ளது.
மற்ற எல்லா சிவத்தலங்களிலும் வலது காலை தூக்கி தாண்டவமாடும் சிவபெருமான் இங்கு இடது காலை தூக்கி ஆடும் கோலத்தில் காட்சியளிக்கின்றார். மேலும் இந்த கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக்கல்லால் ஆனது என்பதால் மரகதவல்லி என்ற பெயரிலும் மீனாட்சி அம்மன் அறியப்படுகிறார்.
நாற்கர சதுர அமைப்புடன் பிரம்மாண்ட சுற்றச்சுவர் மற்றும் கோபுர வாயில்களுடன் இந்த கோயில் வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் பல்வேறு அங்கங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.
இதில் காணப்படும் 10 கோபுரங்களில் தெற்குக்கோபுரம் மிக உயரமானதாக 170 அடியில் வானோக்கி எழும்பி நிற்கிறது. கோபுரங்கள் ஒவ்வொன்றும் பல அடுக்குகளை கொண்டதாகவும் ஆயிரக்கணக்கான சிற்பங்களுடனும் காட்சியளிக்கின்றன.
இக்கோயிலின் கருவறை விமானமானது, இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிம்ம உருவங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
மொத்தமாக 985 தூண்களும் 14 கோபுரங்களும் இந்த கோயிலில் அமைந்துள்ளன. ஒரு ஏக்கர் பரப்பளவைக்கொண்ட பொற்றாமரைக்குளம் எனப்படும் தீர்த்தக்குளத்தையும் இக்கோயில் பெற்றுள்ளது.
சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகிய கோயில் திருவிழாக்கள் மீனாட்சி அம்மன் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.