திருநெல்வேலி பலபெயர்களால் அறியப்பட்டாலும், பெரும்பாலும் நெல்லை,தின்னவேலி,திருநெல்வேலி ஆகிய மூன்று பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், திருநெல்வேலி என்ற பெயரின் ஆங்கிலேய உச்சரிப்பான தின்னவேலி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு திருநெல்வேலி என்ற பெயரால் மீண்டும் அழைக்கப்படலானது.திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்டவர்கள் நெல்லை என்றே அழைக்கிறார்கள்.
தக்காண பீடபூமியின் தென் கோடி முனையில் அமைந்துள்ளதால், புவியியலமைப்பில் முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் திருநெல்வேலி விளங்குகிறது. மாநிலத்தலைநகரமான சென்னையிலிருந்து 613 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருநெல்வேலி.
தமிழ்நாட்டின் அண்டைமாநிலமான கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்திலிருந்து 132 கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி அமையப்பெற்றுள்ளது.
கோவில்களும், காற்றாலைகளும் நிறைந்த நிலம்!
பழங்காலக் கோவில்கள் ஏராளமாக நிறைந்த பகுதியாக திருநெல்வேலியும்,அதனைச் சுற்றிலுமுள்ள பகுதிகளும் அறியப்படுகின்றன. மாநிலத்திலேயே மிகப்பெரிய சிவாலயமான நெல்லையப்பர் ஆலயத்தை தன்னகத்தே கொண்ட பெருமையை கொண்டுள்ளது திருநெல்வேலி.
திருநெல்வேலியின் அமைவிடமானது காற்றாலைகளை நிறுவி வெற்றிகரமாக இயக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றதாகும்.
காற்றாலைகளில் முன்னோடி நிறுவனங்கள் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள இடங்களில் ஆலைகளை நிறுவி மின்சாரம் தயாரிக்கின்றன. இந்நிறுவனங்கள் காற்றாலைகளின் மூலம் 3500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்றன.
கப்பல் மாதா தேவாலயம், ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில், ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோவில், மேல திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருப்பதி போன்றவை இவ்விடததைச் சுற்றிலுமுள்ள இதர முக்கிய இடங்கள் ஆகும்.
திருநெல்வேலியை சென்றடைவது எப்படி?
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் மற்றும், தூத்துக்குடி துறைமுகம், மதுரை, அண்டை மாவட்டமான கன்னியாகுமரி ஆகியவற்றை திருநெல்வேலியுடன் இணைக்கும் நல்லதொரு சாலைக் கட்டமைப்பு உள்ளது.
திருநெல்வேலியின் காலநிலை
திருநெல்வேலியின் காலநிலையானது, தமிழகத்தின் இதர பகுதிகளில் நிலவும் காலநிலையை விட வித்தியாசமானது அல்ல. கோடையில், ஈரப்பதத்துடன் கூடிய வெம்மையும், மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில், குறைவான வெப்பமும் நிலவுகின்றன.