இந்தியாவிலேயே வித்தியாசமான சிற்பக்கலை அம்சமாக இந்த அர்ஜுனன் தபஸ் எனும் பாறைச்சிற்ப அமைப்பு கருதப்படுகிறது. 43 அடி உயரம் கொண்ட இந்த திறந்த வெளி பாறை அமைப்பில் புடைப்புச்சித்திரங்கள் ஒரு பிரம்மாண்ட காட்சித்திரை போன்று செதுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த பாறைச்சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அக்காலத்திய புராணிக கதைச்சம்பவங்களை குறிப்பிடுகின்றன என்றாலும் அது இன்னதுதான் என்பது பற்றி பல கருத்துகள் உலவுகின்றன.
அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்யும் காட்சி இதில் பொதிந்திருக்கிறது என்று ஒரு கருத்தும், பகீரத மன்னன் கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டி தவம் செய்யும் காட்சியே இதில் வடிக்கப்பட்டிருக்கிறது என்றும் இரண்டாவது கருத்தும் உண்டு.
புராணிக அர்த்தங்கள் ஒரு புறம் இருக்க, காட்சித்திரை போன்ற ஒரு பாறை முகப்பில் தேவ உருவங்கள், மனிதர்கள், விலங்குகள் என்று அக்காலத்திய சிற்பிகள் பிரமிக்க வைக்கும் ஒரு கலைப்படைப்பாக இந்த சிற்பத்தொகுதியை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி வடிக்க வேண்டும் என்று எப்படி திட்டமிட்டனர்? எப்படி செயல்படுத்தினர் என்றெல்லாம் நம்மை திகைக்க வைக்கும் கலைப்படைப்புதான் இந்த அர்ஜுணன் தபசு எனும் பாறைச்சிற்பத்தொகுதி.