எத்தனை ரயில்கள் இயக்கினாலும் இந்திய மக்களுக்கு போதவில்லை என்றும் சொல்லும் அளவுக்கு தான் இந்தியாவில் ரயில் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் நாளுக்கு நாள் சட்டவிரோதமாக ரயில்களில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு மட்டும், ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்! அவர்களிடமிருந்து ரூ.53 கோடி மதிப்பிலான 1.24 லட்ச பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன!
போலி டிக்கெட் முகவர்களை தடுக்கும் RPF
இந்தியா முழுவதும் ரெயில்வேயில் போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வேயின் வணிக பிரிவு அதிகாரிகள், ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவை இணைந்து இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சீசன் நேரங்களில் விற்றுத் தீர்ந்துவிடும் டிக்கெட்டுகள்
பண்டிகை காலங்களில் வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயண சீட்டுகள் விரைவாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன. பல இடங்களில் புரோக்கர்கள் அதிக அளவில் பயணச் சீட்டுகளை பதிவு செய்வதாக புகார்கள் மற்றும் வதந்தி உலவுகிறது. இவர்கள் இணையதளத்திலும் அதிக அளவில் பயணிச்சீட்டு பதிவதாக புகார்கள் உள்ளன. இவற்றின் உண்மைத் தன்மை அறிந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான குற்றங்கள் கண்டுபிடிப்பு
ரயில் நிலையங்களில் உள்ள பயண சீட்டு பதிவு மையங்கள், ட்ராவல் ஏஜென்சிகள் தனியார் இணையதள மையங்கள் ஆகியவற்றில் ரயில்வே பாதுகாப்பு படை தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தி தவறான வழியில் அதிக அளவில் பயணச் சீட்டு பதிவு செய்பவர்களை கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் விளைவாக கடந்த ஆண்டு மட்டும் ஆயிரக்கணக்கான குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொடர்ந்து அரங்கேறி வந்த டிக்கெட் முறைகேடு
இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 143 இன் படி அங்கீகாரம் இல்லாமல் பயண சீட்டு விற்பதும், பிரிவு 142(1) இன் படி ரயில்வே ஊழியர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் தவிர மற்றவர் பயண சீட்டு விற்பனையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படுகிறது. இவற்றை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு கடும் அபராதம் அல்லது சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இருப்பினும் ரயில் டிக்கெட் முன்பதிவு குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் 4,975 பேர் கைது
மேலும், டிக்கெட் கவுன்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஒரே நேரத்தில் பெருவாரியான டிக்கெட்டுகளை எடுப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது இந்திய ரயில்வே. அதன்படி, கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில், சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ரூ.53 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 1,24,529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, தட்கல் மற்றும் பல்க் புக்கிங்-கில் முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்து 26 ஆயிரத்து 442 இணையதள ஐ.டி.கள் முடக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் அறிமுகம் செய்ய வாய்ப்பு
இனி வரும் காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க, முக அடையாளம், கைரேகை சரிபார்த்தல், தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற நவீன நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படை ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மோசடிகளை உடனுக்குடன் தடுக்க இயந்திர கற்றல் (Machine Learning) முறை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications



