உலகின் மிகப் பழமையான தேர் திருவிழாக்களில் ஒன்றான பூரி ரத யாத்திரை பகவான் ஜெகநாதரின் பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் கும்பமேளாவிற்குப் பிறகு அடுத்ததாக பெரியதாக நடத்தப்படும் பிரபலமான திருவிழாவாக இது நம்பப்படுகிறது. சடங்குகள், ஆடம்பரங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படும் இந்த பிரமாண்ட தேர் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரிசாவில் கூடுகிறார்கள். குண்டிச்சா யாத்ரா, தேர் திருவிழா, தசாவதாரம் மற்றும் நவதீன யாத்ரா என்று அழைக்கப்படும் இந்த பிரமாண்டமான திருவிழா புராணங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் பழங்கால பாரம்பரியங்களின் சாட்சியாக காட்சியளிக்கிறது. இந்தியா முழுவதிலும் ஏன் உலகும் முழுவதிலும் நடைபெறும் தேர் திருவிழாக்களில் மிகப் பழமையான ரத யாத்திரை இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில், பாரம்பரிய ஒரியா நாட்காட்டியின்படி, சுக்ல பக்ஷ, ஆஷாத் மாதத்தின் இரண்டாவது நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ரத யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்திருவிழாவைப் பற்றிய மேலும் பல தகவல்களை இங்கேக் காண்போம்!
ரதத்தின் பழமையான வரலாறு
பிரம்மபுராணம், பத்மபுராணம் மற்றும் பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால், பூரி ரத யாத்திரையின் பாரம்பரியம் 460 ஆண்டுகள் பழமையானது. புனித மும்மூர்த்திகளின் வருடாந்திர ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்ஷய திரிதியாவிலிருந்து சுமார் 1400 தச்சர்கள் மூன்று பெரிய தேர்களைக் கட்டும் பணியைத் தொடங்குகின்றனர். பூரி மன்னரின் அரண்மனைக்கு முன்னால் முழு வேலையும் செய்யப்படுகிறது. தேரின் அமைப்பு, மாதிரி, வடிவமைப்பு மற்றும் அளவீடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் துல்லியமாக செயல்பட்டு தேர்களை வடிவமைக்கின்றனர். ரத யாத்திரையின் போது முப்பெரும் தேர்களை ஏற்றிச் செல்லும் மாபெரும் ரதங்கள் சாதாரண ஆழமான காடுகளில் இருந்து பெறப்படும் குறிப்பிட்ட வகை வேப்ப மரத்தால் செய்யப்படுகின்றன. இந்த சிறப்பு மரத்தின் சேகரிப்பு பசந்த பஞ்சமியின் புனித நாளிலிருந்து தொடங்குகிறது.
ஜெகநாதரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
உலகப் புகழ்பெற்ற ஜெகநாதருக்கு கை, கால்கள் இல்லை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? புராணங்களின்படி, ஜகந்நாதரின் உருவம் ஒரு அரசனின் கனவில் வந்தது. மன்னர் தனது அரச தச்சருக்கு விளக்கி தனது கனவுகளின் உருவத்தை செதுக்கும்படி கட்டளையிட்டார். சிலை முடிவதற்குள் யாராவது பார்த்தால், வேலையை முடிக்க முடியாது என்று தச்சன் அரசனை எச்சரித்தான். மன்னன் அவனுடன் உடன்பட்டு அவனுக்கு முழு தனியுரிமை அளித்தான். இருப்பினும், ஆர்வம் ராஜாவைத் தொந்தரவு செய்தது, அவர் பட்டறைக்குள் எட்டிப் பார்த்தார். இதனால், சிலை முழுமையடையாமல் உள்ளது.
கோவிலின் உச்சியில் உள்ள கொடி எப்போதும் காற்றோட்டத்தின் எதிர் திசையில் பறக்கிறது. கடந்த 1800 ஆண்டுகளாக கொடி ஒவ்வொரு நாளும் மாற்றப்படுகிறது என்றும் ஒருநாள் கொடியை மாற்றாவிட்டாலும் கோவிலை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு கோவில் மூட வேண்டும் என்று ஏடுகளில் உள்ளது.
கோவிலுக்கு மேலே எதுவும் பறக்காது என்று அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்த வகையான விமானங்களும் இதன் மேல் பறப்பதற்கு அனுமதி இல்லை. கோயிலுக்கு மேலே பறவைகள் கூட பறப்பதில்லை.
2௦22 ஆம் ஆண்டு ரத யாத்திரையின் நிகழ்வுகள்
ஜூலை 1 ஆம் தேதி, ஸ்ரீ குண்டிச்சா எனப்படும் தெய்வங்களை தேரில் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயிலில் இருந்து புறப்படும் முதல் தேர் பாலபத்ரரின் தேராகும். அதைத் தொடர்ந்து சுபத்ரா மற்றும் ஜெகநாதரின் தேர்கள் பின்தொடரப்படுகின்றன. மற்ற சடங்குகள் முடிந்ததும் மாலை 4 மணிக்கு தேர் இழுத்தல் தொடங்குகிறது. ஹேரா பஞ்சமி அதாவது குண்டிச்சா கோயிலுக்கு தேவியை அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியானது ஜூலை 5 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜகந்நாதரின் மனைவியான லக்ஷ்மி, தன் கணவரைக் காணவில்லை என்று கவலைக் கொண்டு அவரின் நிலைமை என்ன என்பதை அறிந்துக் கொள்ள குண்டிச்சா கோயிலுக்குச் செல்வாள். ஜெகநாதர் கோவிலுக்கு திரும்பும் நிகழ்வானது ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும். பூரி ஜெகநாதர் கோவிலின் சிங்க வாயிலில் முடிவடையும் பிரமாண்டமான ரத ஊர்வலம் இதுவாகும். மேலும், ஜூலை 1௦ ஆம் தேதி தெய்வங்கள் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் சுனா பேஷாவும், அதைத்தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி தெய்வங்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் பிரம்மாண்ட விழாவான நிலாத்ரி பிஜயாவும் நடைபெற உள்ளது.
2௦22 ஆம் ஆண்டின் ரத யாத்திரை எப்போது நடக்கவுள்ளது?
ஒரிசா மாநிலத்தின் மிக முக்கியமான திருவிழாவான ஜெகநாதர் ரத யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் புனித நகரமான பூரியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரத யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி வெகு விமர்சியாக நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதிலிருந்து பல லட்ச கணக்கான மக்கள் இத்திருவிழாவில் கலந்துக் கொள்வது வழக்கம். கொரானா தொற்றால் இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த தேர் திருவிழா சற்று இடைவெளிக்கு பிறகு நடைபெறவுள்ளதால் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரத யாத்திரைக்கு எப்படி செல்வது?
புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நெய்ல் விமான நிலையம் பூரிக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். புது டெல்லி, கொல்கத்தா, விசாகப்பட்டினம், நாக்பூர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் மும்பையிலிருந்து வழக்கமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து பூரியை அடைய ஒரு மணி நேரம் ஆகிறது.
பூரியிலேயே தனி ரயில் நிலையம் உள்ளதால் நேரடி எக்ஸ்பிரஸ் மற்றும் பிற அதிவிரைவு ரயில்கள் இங்கு வருகின்றன. இது புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஓகா, அகமதாபாத், திருப்பதி மற்றும் பல முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் பூரி நாட்டில் உள்ள பிற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் சாலை மார்க்கமாக செல்வது மிகவும் சுலபம். யாத்திரையில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்காக ஒரிசா அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இந்த பூரி ரத யாத்திரையில் பக்தியுடன் கலந்துகொள்பவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு மோட்சம் அடைவார்கள் என்று நம்பப்படுவதால் இங்கே வந்து சென்று, ஜெகநாதரின் அருளைப் பெற்றிடுங்கள்.