உலகெங்கிலும் இந்த வருட குளிர்காலம் எதிர்பார்த்ததை விட மிகவும் குளிர்ச்சியான வெப்பநிலையை வழங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப் பொழிவால் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்த நிலையில் காணப்படுகிறது. இணையத்தில் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் புகைப்படங்களும் வீடியோக்களும் மிகவும் வைரலாகி வருகின்றன. இதனைக் காண பெருமளவு சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். எதனால் இப்படி ஆனது என்று பார்ப்போமா?

இந்தியாவில் குளிர் காலம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குளிர் மிகவும் மோசமாக நிலவுகிறது. இதனால் வேறு இடங்களில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் குளிர் பிரதேசங்களுக்கு சென்று பரவசம் அடைகின்றனர். ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் பனிமூட்டம், பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும் மிதமான தட்பவெட்ப நிலை நிலவும் தென்இந்தியாவில் இந்த வருடம் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரதேசங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் மணாலி போன்று காட்சியளித்தது. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உறைபனி காணப்பட்டதோடு லேசான பனிப்பொழிவும் ஏற்பட்டது. வெயில் சுட்டெரிக்கும் சென்னை ஊட்டி மாதிரியான வெப்பநிலையைக் கண்டது.

உறைந்த நயாகரா
அமெரிக்காவில் வீசும் கட்டுக்கடங்காத பனிப்புயலால் உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியானது பனிப்பாறையாக உறைந்துள்ளது. மேலும் இந்த நீர்வீழ்ச்சியானது பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் உள்ளது. பனியினால் நயாகரா அருவியின் மேற்பகுதியில் பனி படர்ந்து காணப்படுவதை நேரில் காண அமெரிக்கா மற்றும் கனடாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் நயாகரா நோக்கி படையெடுத்து வருகின்றனர். சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்கள் தற்போது சமக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் பனிப்புயல்
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே, பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக வீசும் இந்தப் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பொதுமக்கள்
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிக்கு பல்வேறு மாகாணங்களில் மின்சார விநியோக பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க பனிப்பொழிவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் மற்றும் விமானங்களும் வழக்கம் போல் இயங்குவது இல்லை என்பதால் பொதுமக்கள் வீட்டுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டை போல 2023 ஆம் ஆண்டிலும் நடக்குமா
அமெரிக்கா, கனடாவில் வரலாறு காணாத அளவு குளிர் நிலவுவதால் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்துள்ளது. வரும் வாரத்தில் வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸ் அளவு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு வெப்பநிலை -19 டிகிரி அடைந்த போது நயாகரா நீர்வீழ்ச்சி முழுமையாக உறைந்தது. இந்த வருடமும் அப்படி நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications



