தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 01ம் தேதியான இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும் என்றும், இது படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள கணிப்பின் படி, சென்னை மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஏப்ரல் மாத துவக்கத்தில் இருந்தே வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும், மீனம்பாக்கத்தில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக உள்ளது. இது வழக்கமாக கோடை காலத்தில் இருக்கும் வெப்பநிலை தான் என்றாலும் வெயிலின் தாக்கல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 40.9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். ஏப்ரல் 01ம் தேதி துவங்கி, குறைந்தபட்சம் 3 நாட்களுக்காவது வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும். சென்னையில் ஒரு வாரம் வரை வெப்பநிலை 38 டிகிரியை ஒட்டியே இருக்கும். இரவு நேர வெப்பம் 26 டிகிரி செல்சியஸ் மற்றும் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்வசியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.
தெற்கு காற்று மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கடல் காற்று ஆகியவை வெப்பம் அதிகரிப்பதற்கு காரணங்களாக உள்ளன. குறிப்பாக சென்னையில் கடல் காற்றின் வெப்பம் அதிகராக இருக்கும். உள்மாவட்டங்களான கரூர், ஈரோடு, சேலம் ஆகியவற்றில் பிப்ரவரி மாதத்தில் இருந்தே வழக்கத்தை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகவே உள்ளது. இனி வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்
வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து தமிழக பொது சுகாதாரத்துறையும் மக்களுக்காக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எலுமிச்சை சாறு, மோர், லஸி, ஜூஸ்கள் ஆகியவற்றில் ஒரு சிட்டிகை கலந்து குடிக்கவும். இது உடலில் நீர்ச்சத்தை குறைய விடாமல் பாதுகாக்கும். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் பொழுதுகளில் மக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
வீட்டை எப்போதும் காற்றோட்டமாக வைக்க வேண்டும். நேரடி சூரிய ஒளியில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். மது, காஃபின் பானங்கள், கார்போஹைட் நிறைந்த பானங்கள், அதிக புரோட்டின் நிறைந்த உணவுகள், வெளி உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலின் தாக்கம் அபாயகரமானதாக இருக்கும் என்பதால் குழந்தைகள், செல்லப் பிராணிகள் ஆகியவற்றை நிறுத்தப்பட்ட வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம். கைக்குழந்தைகள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இதய பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரையிலான நேரத்தில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டும் என்றால் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications



