ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். ரயில் மற்றும் விமான சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததால், புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை ஒரே இரவில் பெய்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 70-90 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன!
ஒருவழியாக கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கையை ஒட்டி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலு அதிகரித்தது. அதன் படி இலங்கை பகுதியில் கொட்டிய மழை தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்தது. அதன் படி காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என வலுவானது. ஆனால் ஒரு சில நாட்கள் நகராமல் ஒரே இடத்திலையே நீடித்தது. மேலும் இந்த புயல் சின்னம் வலுபெறுமா.? வலு பெறாதா என பல வித குழப்பங்கள் உருவானது. வருமா வராதா என்ற நிலையில் இருந்த புயல் ஒருவழியாக நேற்று இரவு கரையை கடந்தது. இதனால் சென்னையில் 2 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.

சென்னையில் பல இடங்களில் பாதிப்பு
சூறாவளி காரணமாக 16 மணி நேரம் மூடப்பட்ட சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது, ஆனால் பல விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களை சந்தித்தன. வேளச்சேரி பறக்கும் ரயில், சென்னை பீச்-தாம்பரம் புறநகர் ரயில் சேவை ஆகியவையும் நிறுத்தப்பட்டன. சென்னையின் ஏரிகள், குளங்கள் யாவும் நிரம்பியதோடு, தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. சென்னையில் மழை நேரத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல்
ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க துவங்கி, இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்துள்ளது. இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகே நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் இது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் இருந்தது'' என சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று காலை 7 மணியளவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''தற்போதைய நிலவரப்படி இது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையக்கூடும்'' என கூறியுள்ளார்.

புதுச்சேரியில் வரலாறு காணாத மழை
இன்று காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிககனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும் புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை அளவு தரவுகளை வைத்து பார்க்கும் போது இதுவே அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தற்போது 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications



