ஓராண்டுக்கு முன்னர் திறக்கப்பட்டு தென் மாவட்ட பயணிகளுக்கு சேவை செய்யும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னை போக்குவரத்தை வெகுவாகவே மாற்றியமைத்துள்ளது! இதில் இருந்த ஒரு சின்ன சிக்கல் அருகாமையில் ரயில் நிலையம் இல்லாதது தான், ஆனால் இப்போது அந்த குறையும் தீர்ந்து விட்டது! ஆம், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கி துரிதமாக முடிவடைந்த நிலையில், மே 2025 முதல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது!

சென்னையின் 3 ஆவது பெரிய பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க வேண்டும் என்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை புதிதாக கட்டப்பட்ட வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றியது தமிழக அரசு. அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, கும்பகோணம், நாகர்கோயில், இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்க ஆரம்பித்தன.
போதிய வசதியின்றி அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
சென்னையின் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (KCBT) திறக்கப்பட்ட நாளில் இருந்தே பலதரப்பட்ட கருத்துகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பேருந்து நிலையம் சென்னை நகரில் இருந்து எங்கோ உள்ளது, பேருந்து நிலையத்திற்கு அருகில் ரயில் நிலையங்கள் இல்லை, ஆட்டோ கட்டணம் அதிகமாக உள்ளது என்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் தடையின்றி KCBT அருகே புதிய ரயில் நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது!

20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகும் ரயில் நிலையம்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வண்டலூர்- ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது. பணிகள் தொடங்கி நடந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் முடிக்க திட்டப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து, பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுதவிர, மழைநீர் கால்வாய் பணி காரணமாக, மேலும் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
மே 2025 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது
கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்தை வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலமாக, தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளில் வந்து இறங்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் ரயில் போக்குவரத்து வசதியை பூர்த்தி செய்யமுடியும். இதனால் கிளாம்பாக்கம் வந்து செல்லும் பயணிகள் பெரிதும் பலனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
கூடுதல் ரயில்களை இயக்கவும் முடிவு
அதேபோன்று பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ரயில் நிலையம் என்பதால் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து, மின்சார ரயில்களும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், கூடுதலாக பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார் போல் 30 சதவீதம் வரை, கூடுதல் மின்சார ரயில்களை, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications



