குரு பூர்ணிமா இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டானில் வசிக்கும் இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
இந்நாளில் மக்கள் ஆன்மிக குருக்கள் மற்றும் கல்விக் குருக்களை சிறப்பித்தும் மரியாதை செலுத்தியும் மகிழ்கிறார்கள். இந்த நாளில் சீடர்கள் கடவுளுக்கு நிகரான தங்கள் குருக்களை வணங்குகிறார்கள் என்பதை இந்த மதங்களின் கலாச்சாரம் நமக்கு உணர்த்துகிறது. பௌத்தர்கள் தங்கள் குருவான புத்தருக்கு மரியாதை செலுத்துகிறார்கள், ஜைனர்கள் மகாவீரரை வணங்குகிறார்கள், இந்துக்கள் மகரிஷி வேத வியாசரை வணங்குகிறார்கள்.
இந்நாளின் மற்ற சிறப்பம்சங்களைப் பற்றி இங்கே காண்போம்!

வரலாறு
பௌத்த மதத்தின் படி, உத்தரபிரதேசத்தின் சாரநாத்தில் கவுதம புத்தர் தனது முதல் ஐந்து சீடர்களுக்கு இந்நாளில் தான் தன்னுடைய முதல் உபதேசத்தை செய்தார் எனவும், அதனை நினைவுகூரும் வகையில் பௌத்தர்களால் இந்நாள் குரு பூர்ணிமாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்து மதத்தின் வேதங்களான ரிக் வேதம், சாமவேதம், யஜுர் வேதம் மற்றும் அதர்வ வேதம் ஆகிய நான்கு வேதங்களை எழுதிய ஒரே குருவான வேத வியாசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்துக்கள் இந்நாளை கொண்டாடுகின்றனர்.
சீக்கியர்களும் ஜைனர்களும் தங்கள் ஆசிரியர்களையும் குருமார்களையும் போற்றுவதற்காக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். மேலும், நேபாளத்தில் இந்த பண்டிகை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

மக்கள் இந்நாளை எவ்விதம் கொண்டாடுகின்றனர்
குரு பூர்ணிமா தினம் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் தங்களுக்கு பிடித்த கோவிலுக்குச் சென்று வழிபடுகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளிலும் மக்கள் கலந்துக் கொள்கின்றனர்.
சிலர் இந்நாளில் தங்கள் குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விரதம் இருந்து வழிபடுகின்றனர்.
நமக்கு நன்மையும், நெறி முறைகளையும், வாழ்வின் ஆதாரங்களையும் கற்றுக் கொடுத்த குருமார்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் மக்கள் இந்நாளில் தியானம் செய்தும், யோகா செய்தும் கொண்டாடுகின்றனர்.
இந்தியாவின் வாரணாசி, சீரடி, கேதர்நாத், புத்தகயா, சாரநாத், ஹைதராபாத், மைசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் குரு பூர்ணிமா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள சாய்பாபா கோவில்களில் குரு பூர்ணிமா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. கோயம்பத்தூரின் ஈஷா யோகா மையத்திலும் குரு பூர்ணிமா விமர்சியாக கொண்டாடப்படுகிறது. ஆகவே, நீங்களும் இவற்றில் ஏதோ ஒரு வழியில், உங்களுக்கு பிடித்தமான முறையில் குரு பூர்ணிமாவைக் கொண்டாடிடுங்கள்.

குரு பூர்ணிமா 2022
இந்தியாவில் குரு பூர்ணிமா ஆண்டு தோறும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் வரும் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜூலை 13 ஆம் தேதி குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. நம் வாழ்க்கையை வடிவமைக்க உதவிய அனைவர்க்கும் இந்நாளில் நன்றி செலுத்துவது சிறப்பாகும்.
ஆகவே நாமும் இந்நாளில் நம் வாழ்விற்கு உறுதுணையாக இருந்த இருக்கின்ற நம் பெற்றோர்கள் முதல் ஆன்மீக குருக்கள், குருமார்கள் வரை அனைவர்க்கும் நன்றி செலுத்துவோம்!



Click it and Unblock the Notifications



