இந்தியா, கிராமப் பகுதிகளை அதிகமாக கொண்ட நாடு என்பது அனைவருக்கும் தெரியும். கிராமங்கள் என்றால் சாலை வசதி, பஸ் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இல்லாத சூழல், படிப்பறிவு இல்லாத மக்கள், டிஜிட்டல் உலகத்தின் வாடையே இல்லாமல் இருப்பார்கள். அங்கு சென்றால் மொபைல் போன் சிக்னல் கூட கிடைக்காது...இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் நீங்கள் அவசியம் ஒருமுறை இந்தியாவில் உள்ள இந்த 7 கிராமங்களுக்கும் ஒருமுறை விசிட் அடித்து விட்டு வாருங்கள். இங்கு சென்றால் உங்கள் எண்ணம் மாறுவதுடன், நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்து விடும். அப்படி முற்றிலும் மாற்று முனைவுடன் வளர்ச்சி அடைந்த, முன்மாதிரியான, மிகவும் தனித்துவமான 7 கிராமங்கள் எங்குள்ளன என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மவ்லின்னாங்
மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள மவ்லின்னாங் கிராமம் "இந்தியாவின் மிகத் தூய்மையான கிராமம்" என்ற புகழை பெற்றுள்ளது. 2003 ஆம் ஆண்டு, இது ஆசியாவின் தூய்மையான கிராமம் என்ற அடையாளத்தையும் பெற்றது. இங்கு மக்கள் சூழல் பாதுகாப்பு மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். வீடுகள், தெருக்கள் அனைத்தும் அப்படி ஒரு அழுக்கில்லாமல் பராமரிக்கப்படுகின்றன. மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகளையும் பெரிதும் ஈர்க்கிறது.
புன்சாரி
குஜராத்தில் அமைந்துள்ள புன்சாரி கிராமம், "மாடர்ன் வில்லேஜ்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு அனைத்து வீடுகளிலும் சிசிடிவி கேமரா, பாண்ட் ஸ்பீக்கர், தூய்மையான குடிநீர் வழங்கல், பேருந்து சேவை போன்ற வசதிகள் உள்ளன. அரசாங்கம் வழங்கும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, நகரத்து வாழ்க்கை முறையை கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளதன் மூலம், இது முன்னேற்ற கிராமமாக மாறியுள்ளது.

ஹிவாரே பஜார்
மகாராஷ்டிராவின் ஹிவாரே பஜார் கிராமம், மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற கிராமமாக வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஒரு காலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமம், நீர் மேலாண்மையை சிறப்பாக திட்டமிட்டதன் மூலம் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் முன்னேறியுள்ளது. தற்போது, அதிகமான விவசாயிகளைக் கொண்ட கிராமமாக இது உள்ளது.
தர்னாய்
பீகார் மாநிலத்தில் உள்ள தர்னாய் கிராமம், முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமமாக திகழ்கிறது. முந்தைய ஆண்டுகளில் மின்சாரம் கிடைக்காத இந்த கிராமம், நவீன சூரிய சக்தி உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இப்போது, இங்கு வீடுகளும் தெரு விளக்குகளும் சூரிய மின்சாரத்தை பயன்படுத்தி இயங்குகின்றன.
சனிஷிங்னாபூர்
மகாராஷ்டிராவின் இந்த கிராமம் மிகவும் வியப்பை தருவதாக உள்ளது. இங்கு எந்த வீட்டிலும் பூட்டு கிடையாது. கிராம மக்கள் அனைவரும் தீவிரமான பக்தர்களாகவும் நேர்மையாகவும் இருப்பதால், திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதில்லை. இங்கு உள்ள சனி பகவான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ராம்பூர்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் கிராமம், கல்வியில் மிகுந்த வளர்ச்சி அடைந்த கிராமமாகும். இங்கு பலர் உயர் கல்வி பெற்று, அரசு வேலைகளில் உள்ளனர். கிராம மக்கள் அனைவருக்கும் கல்வியறிவு இருக்க வேண்டும் என்று உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
கோக்ரேபெல்லூர்
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோக்ரேபெல்லூர் கிராமம், பறவைகளை பாதுகாக்கும் சிறப்பு கிராமமாகும். இந்த கிராமம் பல்வேறு இனங்களின் குடியேறும் பறவைகளுக்கு ஒரு பாதுகாப்பான தாயகமாக விளங்குகிறது. கிராம மக்கள் பறவைகளை தங்கள் குடும்பத்தினராகக் கருதி, அவற்றுக்காக வாழ்வின் ஒரு பகுதியாக பராமரிக்கின்றனர்.
இந்த கிராமங்கள் பாரம்பரியத்துடன் வளர்ச்சியையும் இணைத்து, இந்தியாவின் நவீன கிராம வளர்ச்சி மாதிரிகளாக திகழ்கின்றன. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, விவசாயம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகின்றன. இந்த மாதிரி கிராமங்கள் மேலும் உருவானால், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அது மாபெரும் உறுதுணையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications



